AppamAppam - Tamil

ஏப்ரல் 10 – சிறுமையிலும் மகிழ்ச்சி!

“தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).

“சிறுமைப்பட்டுவிட்டோம், எங்களை மகிழ்ச்சியாக்கும்!” என்பதே ஆயிரமாயிரமான மக்களின் இருதயக் குமுறலாய் இருக்கிறது. துன்பத்திலும், துக்கத்திலும், இருளிலும் வாடுகிறவர்கள் மகிழ்ச்சியின் ஒளிக்காக ஏங்காமல் இருப்பார்களோ?

அன்று தேவ மனுஷனாகிய மோசே கர்த்தரிடத்தில் இருதயத்தை ஊற்றி ஜெபித்த ஜெபம், “எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்பதாகும். சாதாரணமாக மகிழ்ச்சியாக்கும் என்று அவர் சொல்லாமல், “நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் தக்கதாக எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்ற கேட்டு ஜெபித்தார்.

“துன்பத்தைக் கண்ட வருஷங்கள்” எல்லாம் அவருடைய மனக்கண்களுக்கு முன்பாக வருகிறது. ஏறக்குறைய 400 வருஷங்கள் அவர்கள் எகிப்திலே துன்பத்தைக் கண்டார்கள். அடிமைகளாய் வாழ்ந்தார்கள். கட்டாயமான மற்றும் கடினமான கூலிவேலை செய்தார்கள். செங்கலை அறுத்து, சுட்டு, சுமந்து வாழ்நாளெல்லாம் அவர்கள் தொந்துபோனார்கள். செங்கலை சுடுவதற்குப் போதுமான வைக்கோல்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆளோட்டிகள் அவர்களை சவுக்குகளினால் அடித்து சிறுமைப்படுத்தினார்கள். அவர்கள் ஜீவன் அவர்களுக்கு கசப்பானதாயிருந்தது.

அவர்கள் பார்வோனுடைய அடிமைத்தனத்தைவிட்டு வெளியே வந்த பிறகும்கூட அவர்களுடைய துன்பங்கள் முழுவதுமாய் நீங்கவில்லை. வனாந்தரமாகிய பாலைவனத்தில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தார்கள். ஏதோ ஓரிரு மாதங்களல்ல, நாற்பது வருடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டியதாயிற்று. யாரேனும் பாலைவனத்தில் தங்க விரும்புவார்களா? அவர்கள் முன்னே பாலும் தேவனும் ஓடுகிற கானான் இருந்தது உண்மைதான். ஆனால் உடனே அதை சுதந்தரித்துக் கொள்ள முடியாதபடி ஏராளமான தடைகள் இருந்தன.

மோசே “தேவனே எங்களை மகிழ்ச்சியாக்கும்; நாங்கள் சிறுமைப்பட்ட நாட்களுக்கும், வேதனை அனுபவித்த வருஷங்களுக்கும்தக்கதாக எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று மன்றாடினார். நீங்களும்கூட ஒருவேளை துன்பப்பட்டு, மனம் நொந்து, துக்கத்தோடு நடந்து கொண்டிருக்கலாம். பல ஆண்டுகளாக பெருங்காற்றினாலும், சுழல் காற்றினாலும் அடிக்கப்பட்டு வேதனையோடு நடந்து கொண்டிருக்கலாம். வீசுகிற புயல்காற்றையும், கொந்தளிக்கிற கடலையும் பார்த்து அதைரியப்பட்டு இருந்திருக்கலாம். இன்று மோசேயோடுகூட சேர்ந்து, “கர்த்தாவே எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று கதறுவீர்களா?

தேவபிள்ளைகளே, கானான் மிக அருகிலே உள்ளது என்பதை விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களை மகிழ்ச்சியாக்குவார். உங்கள் கண்ணீர் ஆனந்தக் களிப்பாய் மாறும். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். நீங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்குத்தக்கதாக மகிழ்ச்சியான வருஷங்களைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.