AppamAppam - Tamil

Mar 31 – சுகம் அளிப்பவர்!

“இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி. 13:8).

இயேசு கிறிஸ்து சுகத்தை அளிப்பவர். தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்தருளுகிறவர். தெய்வீக வல்லமையும், மனதுருக்கமுமுடையவர். அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்டிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

‘இயேசு’ என்ற பதத்திற்கு ‘அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவர்’ என்பது அர்த்தமாகும். அவர் பாவங்களை மட்டுமல்ல, வியாதிகளையும் நீக்குகிறவர். சாபங்களையும் முறிக்கிறவர், சத்துருவின் தலையை நசுக்கினவர். மேலான விடுதலையை உங்களுக்குத் தந்தருளுகிறவர். நீங்கள் அவருடைய பிள்ளைகள், அவர் உங்கள் அன்பின் பிதா.

இன்று வியாதியைச் சந்திக்காத மனிதனே இல்லை. உலகத்திலுள்ள வியாதிகளை எல்லாம் எண்ணிப்பார்த்தால் அது எண்ண முடியாத அளவுக்கு அதிகமாய் இருக்கின்றன. பல பல ரூபத்தில் அவை வருகின்றன. விதவிதமான வேதனைகளைக் கொடுக்கின்றன. வியாதியினால் ஆரோக்கியம் கெட்டுப்போகும்போது, யாரிடம் போனால் சுகம் கிடைக்கும், ஆரோக்கியம் வரும் என்று அங்கலாக்கிறார்கள்.

வியாதியானாலும் சரி, அல்லது மற்ற எந்தப் பிரச்சனையானாலும் சரி இயேசுவண்டை வாருங்கள். கடும் புயலில் கப்பல் அலை மோதும்போது, எப்படி கலங்கரை விளக்கு வெளிச்சத்தை வீசி நம்பிக்கையைக் கொடுக்கிறதோ, அதுபோல இயேசுகிறிஸ்து உங்களுக்கு நம்பிக்கையின் தீபமாய் இருக்கிறார். வைத்தியரைத் தேடி ஓடுவதற்கு முன்பாக இயேசுவண்டை வந்து விடுங்கள். “இயேசுவே! எனக்கு சுகம் தாரும்” என்று கேளுங்கள்.

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் இன்றைக்கும் ஜீவிக்கிறார். தம்மை நோக்கி ஓடி வருகிற ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய அவர் ஆவலோடிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “இயேசு சகல பட்டணங்கள் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்” (மத். 9:35).

“ஜனங்கள் அவரை அறிந்து, அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித் திரிந்து பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டு வந்தார்கள். அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்” (மாற்கு 6:54,55,56).

தேவபிள்ளைகளே, அவர் அன்றைக்கு எருசலேமிலும், யூதேயாவிலும், கப்பர்நகூமிலும் செய்த வல்லமையான அற்புதங்களை இன்றைக்கு நீங்கள் இருக்கும் இடத்திலே செய்ய வல்லமையுள்ளவர். காரணம், அவருடைய வல்லமையும் மாறாது, மனதுருக்கமும் மாறாது. அவர் உங்களுடைய பரிகாரியாகிய கர்த்தர். நினைவிற்கு:- “நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை” (மல்கி. 3:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.