AppamAppam - Tamil

ஏப்ரல் 11 – சிருஷ்டி கர்த்தர்!

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:1).

நம் தேவன் சிருஷ்டி கர்த்தர். மனிதனுக்காகவே அவர் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். வானம் என்று சொல்லப்படுவது, வெறும் ஆகாயம் அல்ல, அது பரலோகத்தையும், அங்குள்ள வான சேனைகள் அனைத்தையும் குறிக்கிறது. மனிதனை உண்டாக்குவதற்கு முன்பாகவே மனிதனுக்கு பணிவிடை செய்வதற்காக வானத்திலுள்ள தேவதூதர்களையெல்லாம் அவர் சிருஷ்டித்தார்.

உலகத்தில் எவ்வளவு பெரிய விஞ்ஞானியானாலும் சரி, அவனால் ஒரு புதிய அணுவை உருவாக்கவே முடியாது. ஏற்கெனவே தேவன் சிருஷ்டித்தவைகளைத் தான் அவன் புதிய பொருட்களாக மாற்றிக் கொண்டிருக்கிறான். சிருஷ்டிப்பின் வல்லமையை கர்த்தர் தேவதூதருக்கோ அல்லது மனிதனுக்கோ கொடுக்கவில்லை. ஒரு அணுவை சிருஷ்டிக்க வேண்டுமென்றால், அதற்கு எத்தனையோ கோடி டன் எரிபொருட்கள், மின்சாரம் போன்றவைகள் தேவைப்படக்கூடும். அவை அனைத்தும் கர்த்தரின் படைப்பே. எந்த விஞ்ஞானியாலும் இவற்றைப் படைக்க முடியாது. நம் கர்த்தர் அவ்வளவு பெரியவர்!

வானாதி வானங்களையும், சூரிய, சந்திரன், திரளான நட்சத்திரங்களையும் சிருஷ்டித்த அவர் எவ்வளவு வல்லமையும் மகிமையுமுள்ளவர்! காணப்படுகிறவைகளானாலும், காணப்படாதவைகளானாலும் அவை அனைத்தும் நம் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்டவைகளே. வேதம் சொல்லுகிறது: “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வ பூமியின் தேவன் என்னப்படுவார்” (ஏசா. 54:5).

வேதத்தின் முதல் வசனம், சிருஷ்டி கர்த்தரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. “ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” என்பதே அந்த அறிமுகம். அந்த மகா மகத்துவமும், மகிமையும், வல்லமையுமுள்ள தேவன் உங்கள் அருமை தகப்பனாய் இருக்கிறது உங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அல்லவா? தேவபிள்ளைகளே, அந்த சிருஷ்டி கர்த்தரானவர் இன்றைக்கும் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் சிருஷ்டிக்க கிருபையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மறந்து போகாதேயுங்கள்.

வேதம் சொல்லுகிறது, “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசா. 43:1). நம் ஆண்டவரைப் போல மகிமையும் மகத்துவமுமுள்ள தேவன் வேறு யார் உண்டு? அவரைப் போல அன்பு செலுத்தி உங்களைக் காக்கிறவர்கள் வேறு யாருண்டு?

தேவபிள்ளைகளே, சிருஷ்டிப்புகள் யாவும் கர்த்தரைத் துதிக்கின்றன. நீங்களும் துதிப்பீர்களா? “வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுள்ளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்” (வெளி. 5:13).

நினைவிற்கு:- “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.