AppamAppam - Tamil

ஏப்ரல் 09 – சிறையிருப்பு மாறும்!

“உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்” (செப். 3:20).

சிறையிருப்பை யாரும் விரும்புவதில்லை. சிறையிருப்பு என்பது ஒரு அடிமைத்தனமாகும். அது சுதந்தரத்தையும், சுயாதீனத்தையும் இழந்த ஒரு நிலைமையாகும். அவமானத்தின் சின்னமாகும்.

பழைய ஏற்பாட்டிலே, இஸ்ரவேலருடைய வாழ்க்கையில் அவர்கள் பலமுறை சிறையிருப்பின் வழியாக செல்லவேண்டியதிருந்ததை வாசிக்கிறோம். அந்நிய தேசத்திலே அடிமைகளாய் விற்கப்பட்ட நிலைமை வந்தது. சிறையிருப்பின் நாளிலே, அவர்கள் நிந்தையையும், அவமானத்தையும், பரியாசத்தையும் அடைந்தார்கள். ஆனால் அவர்கள் மனம் திரும்பி கர்த்தரை நோக்கிப் பார்த்தபோது, கர்த்தர் அவர்களுடைய சிறையிருப்பை திருப்பினார்.

சரீரம் சிறைச்சாலையில் இருப்பதைப் பார்க்கிலும், ஆத்துமா, பாவ சிறைக்குள்ளும், சாத்தானின் சிறைக்குள்ளும் இருப்பது எத்தனை வேதனையான காரியம்! சிலர் பாவ பழக்க வழக்கங்களுக்காக சிறையில் இருக்கிறார்கள். கஞ்சா, மது போன்ற காரியங்கள் சிலரை சிறைக்குள் வைத்திருக்கிறது. இச்சைகளின் ஆவியினால் பீடிக்கப்பட்டு விபச்சாரமாகிய சிறைக்குள் சிலர் கிடந்து தவிக்கிறார்கள்.

இதைவிட கொடுமையானது, ஆவியின் சிறையிருப்பு. சிலருடைய ஆவியை சாத்தானுடைய ஆவி சிறைப்பிடித்து பைத்தியக்காரர்களாய் உலாவ வைத்திருக்கிறான். பிசாசானவன் ஒரு மனிதனின் ஆவியைக் கட்டி, அவனுடைய ஆவியின் மேல் அவன் ஆளுகை செய்து வழிநடத்தும்போது, அந்த மனிதன் தாங்கமுடியாத வேதனைகளை அனுபவிக்கிறான். விடுதலை பெற முடியாமல் தத்தளிக்கிறான். கர்த்தருடைய ஆவியானவர் உங்களை பாவம், மரணம் மற்றும் பிசாசின் ஆளுகையிலிருந்து விடுதலையாக்கி, அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள் உட்படுத்தியிருக்கிறார். சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகிற சுவிசேஷத்தை கர்த்தர் உங்களுடைய கைகளில் தந்திருக்கிறார்.

நம் தேவன் சிறையிருப்பை மாற்றுகிறவர். இருளை வெளிச்சமாக பிரகாசிக்கச் செய்கிறவர். கட்டுண்டவர்களுக்கு விடுதலையைக் கூறுகிறவர். வேதம் சொல்லுகிறது, “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டு தலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்… என்னை அனுப்பினார்” (ஏசாயா 61:1-3).

தேவபிள்ளைகளே, சிறையிருப்பை திருப்பும் ஊழியத்தை கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கப் பிரியப்படுகிறார். அபிஷேகத்தினால் நீங்கள் நிறைந்திருப்பீர்களென்றால், நுகத்தடிகளை முறித்துப் போடுவீர்கள்.

நினைவிற்கு:- “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்” (யோபு 42:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.