AppamAppam - Tamil

ஏப்ரல் 08 – சிலுவையாகிய ஏணி!

“வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள்” (யோவான் 1:51).

யாக்கோபு சொப்பனத்தில் கண்ட ஏணியில் தேவதூதர்கள்தான் ஏறுகிறவர்களாகவும் இறங்குகிறவர்களாகவும் இருந்தார்களே தவிர, எந்த மனுஷனும் அதிலே ஏறினதாகக் காணோம். “பாவம்” என்பது மனுஷனுக்கும் தேவனுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டது.

மனுஷரால் தேவனிடத்தில் சென்று உறவாட முடியவில்லை. மகிழ்ந்து களிகூர முடியவில்லை. “பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” (யோவான் 3:13) என்று வேதம் சொல்லுகிறது. இயேசுகிறிஸ்து பரலோகத்துக்கும், பூலோகத்துக்கும் இணைப்பு ஏற்படுத்துகின்ற விதத்தில், மனுமக்கள் பிதாவினிடத்திற்கு ஏறிச் செல்லக்கூடிய ஏணியாய் மாறினார். கல்வாரி சிலுவையே அந்த ஏணியாகும். ஆம், அவரே மண்ணுக்குரியவர்களை விண்ணுக்குரிய நட்சத்திரமாக பிரகாசிக்கச் செய்கிறவர்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையின் உயர்வாக நிற்கிற ஏணியாகிய சிலுவையை நோக்கிப் பாருங்கள். சிலுவையில் கிறிஸ்து அடைந்த காயங்களே உங்களுக்கு பரத்துக்கு ஏறும் படிகளாக விளங்குகின்றன. சிலுவையின் வழியேயல்லாமல் ஒருபோதும் நீங்கள் பரலோகத்துக்குச் செல்லவே முடியாது. இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6).

அவர் சிலுவையிலே பாடுகளை அனுபவித்த பிறகு திரளான ஜனங்கள் பரலோகத்துக்கு ஏறிச் சென்றார்கள். “இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன்” (வெளி. 19:1) என்று அப். யோவான் எழுதுகிறார். ஆம், எப்பொழுது சிலுவையிலே இயேசு ஜீவனைக் கொடுத்தாரோ, அப்பொழுதுதான் கல்வாரி தியாகத்தையும் கிறிஸ்து சிந்தின இரத்தத்தையும் பயன்படுத்திக் கொண்டு, பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்று, பரலோகத்தில் பிரவேசிக்க ஆரம்பித்தார்கள்.

வானத்தையும், பூமியையும் இணைக்கிற ஏணியாக இன்றைக்கும் கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். “நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ” என்று கேட்கிறார் (எரே. 23:23). ஆம், வானம் அவருக்கு சிங்காசனமாகவும், பூமி அவருக்கு பாதப்படியாகவும் இருக்கின்றன (ஏசா. 66:1). ஆயினும் அவர் உங்கள்மேல் வைத்த அன்பு எவ்வளவு அதிகமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவருடைய காருண்யம் எவ்வளவு பெரியது!

மீண்டும் ஒரு விசை அந்த ஏணியை நோக்கிப் பாருங்கள். அந்த ஏணிக்கு இரண்டு நுனிகள் உண்டு. பூமியின் மேல் இருக்கும் அந்த நுனி அவர் மனுஷகுமாரன் என்பதைக் காண்பிக்கிறது. பரலோகத்தில் இருக்கும் அடுத்த நுனி அவர் தேவ குமாரன் என்பதைக் காண்பிக்கிறது. இன்றைக்கு அவர் உங்களுக்கு முன்பாக மனுஷ குமாரனாகவும், தேவகுமாரனாகவும் நின்றுகொண்டிருக்கிறார். தேவ பிள்ளைகளே, “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” (அப். 17:27).

நினைவிற்கு:- “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.