AppamAppam - Tamil

ஏப்ரல் 05 – சிலுவையின் பகைஞர்கள்!

“ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், …அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே” (பிலி. 3:18,19).

கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்களாயிருப்பவர்கள், கிறிஸ்துவுக்கும், அவருடைய கிருபைக்கும், இரக்கத்திற்கும் பகைஞர்களாயிருக்கிறார்கள். இந்த வேத பகுதியில் கிறிஸ்துவின் பகைஞனைக் குறித்து அப். பவுல் ஐந்து காரியங்களைக் குறிப்பிடுகிறார். 1. அவர்கள் வேறு வழியாய் நடக்கிறவர்கள். 2.அழிவின் பாதையில் செல்ல முடிவு செய்தவர்கள் 3. அவர்களுடைய தேவன் வயிறு. 4. இலச்சையே அவர்களுடைய மகிமை. 5. அவர்கள் பூமிக்கடுத்தவைகளையே சிந்திக்கிறார்கள்.

நீங்கள் சிலுவைக்கு சொந்தமான கிறிஸ்துவின் அன்புக்கு சுதந்தரவாளிகளாய், அவரோடு இணைந்திருப்பீர்களானால், நிச்சயமாகவே சிலுவையின் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள். சிலுவை உங்களுக்குக் கிடைத்த பெரிய மேன்மை அல்லவா? இயேசு சிலுவையிலே உங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார் அல்லவா?

சிலுவைப் பாதை என்பது இடுக்கமானது. அதன் வழி குறுகலானது. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்தான் அந்த சிலுவைப் பாதை வழியாக பொறுமையோடு நடந்து வருவார்கள். ஆனால் சிலுவையின் பகைஞரோ, ஆடம்பரமான பாதைகளை தங்களுக்கென்று வகிக்கிறார்கள். உலகத்தின் உல்லாசங்களை அனுபவிக்க வேண்டுமென்ற நோக்கமுடையவர்களாய் இருக்கிறார்கள்.

சிலுவைக்குப் பகைஞன் யார்? முதல் பகைஞன் சாத்தானாகிய பிசாசுதான். அவன் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமை கொண்டதினாலே பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். அதற்கு பழி வாங்கும்படி இயேசுவை சிலுவையில் அறைய தீர்மானித்தான். அதற்காக இயேசுவின் சீஷர்களில் ஒருவனாகிய யூதாஸுக்குள் புகுந்தான். எந்த சிலுவையினால் சாத்தான் இயேசுவை அழிக்க நினைத்தானோ, அதே சிலுவையினால் அவன் அழிக்கப்பட்டான்.

இயேசுகிறிஸ்து ஆணிகள் கடாவப்பட்ட தன்னுடைய பாதங்களினாலே சாத்தானுடைய தலையை நசுக்கினார். அவனை செயலற்றுப் போகப்பண்ணினார். யார், யார் சிலுவைக்கு பகைஞராய் இருக்கிறார்களோ, அவர்களும் அவனோடே அழிக்கப்படுவார்கள்.

சிலுவையின் பகைஞருடைய அடுத்த குணாதிசயம் இம்மைக்காகவே வாழ்வதாகும். பூமிக்குரியவைகளே தேடுவதாகும். அழிவுள்ளவைகளுக்காக அலைந்து திரிவதாகும். இயேசுகிறிஸ்து என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உலகத்தின் காரியத்தைக் குறித்து கவலைப்படாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறார் (மத். 6:31).

தேவபிள்ளைகளே, எப்போதும் சிலுவையோடுகூட இணைந்து கொள்ளுங்கள். அதுதான் உங்களை நித்தியத்திற்கு உயர்த்தும். அதுதான் நித்திய வாழ்வுக்கு வழி நடத்தும். சிலுவையேயல்லாமல் பாவ மன்னிப்பில்லை, இரட்சிப்பில்லை, மீட்பில்லை, விடுதலையில்லை.

நினைவிற்கு:- “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (பிலி. 3:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.