AppamAppam - Tamil

ஏப்ரல் 04 – உயிர்த்தெழுந்தார்!

“மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” (வெளி. 1:18).

இன்று உலகமெங்கும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலை சந்தோஷத்துடன் நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். மற்ற எல்லா மார்க்கங்களுக்கும், கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு இயேசுகிறிஸ்துவின் உயிர்தெழுதலில்தான் இருக்கிறது. மற்ற மதங்களின் ஸ்தாபகர்கள் மரித்து, மண்ணோடு மண்ணா மாறினார்கள். ஆனால் கிறிஸ்து மரணத்தினால் கட்டப்படக்கூடாதவராயிருந்தார் (அப். 2:24). தேவன் அவருடைய மரண உபாதைகளின் கட்டை அவிழ்த்து அவரை எழுப்பினார். இயேசு உயிர்த்தெழுந்தார்.

ரோம அரசாங்கம் அவரை கல்லறையிலே அடக்கி வைக்க முயன்றது. போர்வீரர்கள் கல்லறையை மூடி சீல் வைத்து பாதுகாத்தார்கள். ஆனால் வாக்குப்பண்ணினபடி மூன்றாம் நாளிலே இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார். ஆகவேதான், நீங்கள் மகிழ்ந்து சந்தோஷத்தோடு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” என்று சொல்லுகிறீர்கள் அல்லவா?

நீங்கள் செத்த தெய்வத்தை ஆராதிக்கவில்லை. மரித்து, மண்ணோடு மண்ணாய் போய்விட்டவர்களை ஆராதிக்கவில்லை. கல்லறையும், சிலையுமாய் இருக்கிறவர்களை ஆராதிக்கவில்லை. உங்களுக்காக உயிரைக் கொடுத்தவரும், உங்களுக்காக உயிரோடு எழுந்தவரும், இன்றும் ஜீவிக்கிறவருமான இயேசு கிறிஸ்துவையே நீங்கள் ஆராதிக்கிறீர்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய மனதுருக்கமும் வல்லமையும் மாறவில்லை.

இயேசு உயிர்த்தெழுந்தார் என்னும் நிகழ்வினாலே உங்களுக்கு அநேக வாக்குத்தத்தங்களுண்டு. மகிமையான நம்பிக்கையுண்டு. அவர் உயிர்த்தெழுந்தது போல நாமும் உயிர்த்தெழுவோம் என்கிற நம்பிக்கை உங்களுக்குள் வருகிறது. மரணம் ஒரு முடிவல்ல, அது ஒரு இளைபாறுதல்தான் என்பதை இயேசுகிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். இன்றைக்கும் அவர் பிதாவினுடைய வலதுபாரிசத்திலே அமர்ந்திருந்து உங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறார். மன்றாடி ஜெபித்துக் கொண்டேயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையை ஊற்றிக் கொண்டேயிருக்கிறார். எழுப்புதலை தந்து கொண்டேயிருக்கிறார்.

யோபு சொல்லுகிறார், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் அறிந்திருக்கிறேன்” (யோபு 19:25). உயிர்த்தெழுந்த இயேசு மீண்டும் வருவார். இயேசுகிறிஸ்து மீண்டும் வரும்போது, நீங்கள் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் முகமுகமாய் காணும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். கர்த்தருடைய பரலோக குடும்பமும் பூலோக குடும்பமும் ஒன்றாய் இணையும் நாள் எத்தனை பாக்கியமான நாளாயிருக்கும்!

நினைவிற்கு:- “குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்” (யோவான் 6:40).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.