AppamAppam - Tamil

Mar 9 – மரியாள்!

“இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக்.1:38).

வேதத்திலுள்ள ஸ்திரீகளுக்குள் மரியாள், கர்த்தரிடத்தில் கிருபை பெற்றவளும், ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் இருந்தாள். மரியாளின் குணாதிசயங்களை வாசித்து தியானிக்கும்போது, தொடர்புடைய சம்பவங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய ஜீவியத்தைப் பக்திவிருத்தியடையச் செய்கிறதாயிருக்கிறது.

மரியாள், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட கிருபையின் பாத்திரம். ஆசீர்வதிக்கப்பட்ட ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வாதத்தின் பாத்திரம். ஆண்டவருக்கு அடிமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்த தாழ்மையின் பாத்திரம். பரிசுத்த ஆவியானவரின் நிரப்புதலுக்காக ஏங்கி எதிர்பார்த்த வாஞ்சையின் பாத்திரம். விசுவாசத்தினால் தன்னை தியாகத்திற்கு ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்பின் பாத்திரம். மகிழ்ச்சியோடு தேவனை மகிமைப்படுத்தும் துதியின் பாத்திரம். எல்லாவற்றையும் தனக்குள்ளே அடக்கி வைத்து சிந்திக்கும் தியானத்தின் பாத்திரம்.

பழைய ஏற்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு ஸ்திரீயின் மூலம் பாவமும், சாபமும் மனுக்குலத்திற்குள் வந்தது. அந்த ஸ்திரீதான் ஏவாள். அதே நேரத்தில், புதிய ஏற்பாட்டில் சாத்தானின் தலையை நசுக்கும் ஸ்திரீயின் வித்தை மரியாள் கொண்டு வந்தாள். இந்த ஸ்திரீயின் மூலம் உலகத்திற்கு ஆசீர்வாதமான இயேசு தோன்றினார். மரியாளின் வாழ்க்கையும்கூட கிருபையையும், ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது.

உலகத்தில் கோடானுகோடி மக்கள் இருந்தபோதிலும் மரியாளுக்குக் கர்த்தருடைய கண்களில் தயவு கிடைக்கக் காரணம் என்ன? வேதம் சொல்லுகிறது: “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9). “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது” (நீதி.15:3). “அவருடைய கண்கள் மனுப்புத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது” (சங்.11:4).

 கர்த்தருடைய கண்கள் மரியாளை நோக்கிப் பார்த்தபோது, அவளுடைய தாழ்மை, அவளுடைய பக்தி, தேவனுக்குக் தன்னை தியாகமாக அர்ப்பணிக்கிற சுபாவம் ஆகியவை அவரை மிகவும் கவர்ந்தது. தாழ்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் கிருபை அளிக்கிறார் அல்லவா! வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக். 4:10). அப்படியே கர்த்தர் மரியாளின் தாழ்மையைக் கண்டு அவளை உயர்த்த சித்தங் கொண்டார்.

கர்த்தர் உங்களை உயர்த்தவேண்டுமென்றால், உங்களுக்கு தாழ்மை அவசியம். தேவபிள்ளைகளே, நருங்குண்ட, நொறுங்குண்ட இருதயத்தோடு தேவசமுகத்தில் உங்களைத் தாழ்த்துவீர்களென்றால், கர்த்தர் நிச்சயமாகவே உங்களை உயர்த்துவார்.

நினைவிற்கு:- “பணிந்தவர்களின் ஆவியை உயிர்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்” (ஏசா. 57:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.