AppamAppam - Tamil

Mar 6 – மந்திரவாதிகளோடு போராட்டம்!

“யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை” (எண். 23:23).

அன்றைக்கு கர்த்தருடைய வார்த்தையின்படி மோசே புறப்பட்டு வந்து, பார்வோனுக்கு முன்னால் தன் கோலைப் போட்டபோது, அது பாம்பாய் மாறியது. அதே அற்புதத்தை எகிப்திலுள்ள மந்திரவாதிகளும் செய்தார்கள். அவர்களுடைய கோல்களும் கீழே போடப்பட்டபோது பாம்புகளாய் மாறின. மோசேக்கும் மந்திரவாதிகளுக்கும் இடையே போராட்டம். அதே நேரத்தில், கீழே நெளிந்து கொண்டிருந்த பாம்புகளுக்கிடையேயும் போராட்டம். போராட்டத்தில் யார் ஜெயம் பெற்றது? மோசேயினுடைய கோல் மந்திரவாதிகளின் கோல்களை விழுங்கிப் போட்டது. வெற்றி கர்த்தருடையது.

மந்திரவாதிகள் தங்கள் கைகளில் இருக்கும் குட்டிச் சாத்தான்கள் மூலமாக சில வகை அற்புதங்களைச் செய்யலாம். மற்றவர்களைக் கெடுக்க நினைக்கலாம். ஆனாலும் முடிவில் அந்த வல்லமைகள் தோற்றுப் போகின்றன. தேவனுடைய ஊழியக்காரர்களின் கோல்கள் மந்திரவாதிகளின் கோல்களை விழுங்கியதுபோல நீங்கள் நிச்சயமாகவே ஜெயமெடுப்பீர்கள். கர்த்தர் சொல்லுகிறார், “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்” (ஏசா. 54:17).

மந்திரவாதிகளின் வல்லமை குறைவானதுதான். அவர்கள் ஆரம்பத்தில் மோசேக்குப் போட்டியாக ஒரு சில அற்புதங்களைச் செய்தார்கள். தங்கள் மந்திரவாதத்தினால் தவளைகளை வரப்பண்ணினார்கள். ஆனால் மோசே வாதைகளாக பேனை உண்டு பண்ணினபோது, மந்திரவாதிகளால் பேன்களை பிறப்பிக்கக்கூடாமல் போயிற்று (யாத். 8:18).

 அதேநேரத்தில், தேவ பிள்ளைகளின் வல்லமை மந்திரவாதிகளின் வல்லமையைப் பார்க்கிலும், பல கோடி மடங்கு மேன்மையானது. மோசே எகிப்தியர் மேல் கொப்பளங்களை வரப்பண்ணியபோது மந்திரவாதிகளால் அதைத் தடுக்க முடியவில்லை. பயங்கரமான எரி கொப்பளங்கள் அந்த மந்திரவாதிகளின் மேலும் வந்தது (யாத். 9:11). அந்த மந்திரவாதிகளின் நிலைமை எத்தனை பரிதாபமாய் இருந்திருக்கும்! தேவபிள்ளைகளே, நீங்கள் மந்திரவாதிகளையும், அவர்களது செய்வினைகளையும் கண்டு பயப்படும்படி அழைக்கப்பட்டவர்களல்ல, மந்திரவாதிகளின் வல்லமைகளை முறியடிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள்.

 பல வேளைகளில் நீங்கள் மந்திரவாதிகளை எதிர்த்து நிற்க வேண்டியதிருக்கிறது. சில பயங்கரமான செய்வினை வல்லமைகளை முறிப்பதற்கு, பல நாட்கள் நீங்கள் உபவாசமிருக்க வேண்டியிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவா. 4:4). மந்திரவாதியைப் பார்த்து, “உன்னிலிருக்கிற அசுத்த ஆவிகளைப் பார்க்கிலும் என்னோடுகூட இருக்கிற பரிசுத்த ஆவியானவர் பெரியவர். எனக்குள் வாசம் பண்ணுகிற கிறிஸ்து பெரியவர். வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதபடி என்று சொல்லுமளவும் அவர் அவ்வளவு பெரியவர்” என்று சொல்லுங்கள். தேவபிள்ளைகளே, மந்திரவாதிகளைக் கண்டுப் பயப்படாதிருங்கள். அவர்களை எதிர்த்து நில்லுங்கள். பிசாசை எதிர்த்து நிற்கும்போது அவன் ஓடிப்போவான்.

நினைவிற்கு:- “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?” (1 யோவா. 5:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.