No products in the cart.
Mar 5 – மரணத்தை வெல்வது எப்படி?
“ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு” (சங். 68:20).
மரணத்தை வெல்வது எப்படி என்பதை குறித்து இங்கே தியானிப்போம். பழைய ஏற்பாட்டிலே, மரணத்தை வென்ற இரண்டு பேர் உண்டு. அவர்கள் மரணமடையவில்லை. மரணமடையாமலே காணாமற்போய்விட்டார்கள். அவர்களில் ஒருவர் ஏனோக்கு, அடுத்தவர் எலியா. இதுவரையிலும் பூமியில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்களுக்குள் கல்லறையில்லாமல் ஜீவனுக்குள் பிரவேசித்த அற்புத மனிதர்கள் இவர்கள். அவர்களுடைய வாழ்க்கையை நோக்கிப் பார்க்கும்போது, ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகள் உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம் (சங். 68:20).
1. நீதியின் பாதையில் மரணமில்லை:- வேதம் சொல்லுகிறது, “நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்” (நீதி. 11:4; 10:2). நோவா நீதிமானாய் இருந்தார். உலகம் அழிக்கப்பட்டபோது பாவிகளோடு அவர் மரணமடையாமல், கர்த்தருடைய நீதியாகிய பேழைக்குள் பாதுகாக்கப்பட்டார். மரணத்திற்கு தப்பும் வழி அந்த பேழையாய் இருந்தது. இன்றைக்கு இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்குத் தப்பும் வழியாக, இரட்சிப்பின் பேழையாய் இயேசு இருக்கிறார்.
2. கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு மரணமில்லை:- வேதம் சொல்லுகிறது, “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கிறது” (சங். 33:18,19). கர்த்தருக்குப் பயப்படுதல் தீர்க்காயுசைக் கொண்டு வருகிறது. மாத்திரமல்ல, மரணத்திற்கும் விலக்கிக் காக்கிறது.
3. விசுவாசிக்கிறவனுக்கு மரணமில்லை:- “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெயாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவா. 5:24).
4. கர்த்தருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனுக்கு மரணமில்லை:- இயேசு சொன்னார், “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவா. 8:51). மரணத்தைத் தடுக்கக்கூடிய வழியை வேதவசனங்களும், கிறிஸ்துவுடைய வாயின் வார்த்தைகளும் உங்களுக்கு அறிவிக்கின்றன. அதைக் கைக்கொள்ளுவீர்களா? கடைபிடிப்பீர்களா? மரணத்தை ஜெயிப்பீர்களா?
கர்த்தருடைய வருகை மிகவும் நெருங்கிவிட்டது. கிறிஸ்துவின் வருகையின்போது, ‘கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோவோம்’ (1 தெச. 4:16,17) என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, அந்த நேரம் நீங்கள் மரணத்தை ஜெயிப்பீர்கள்.
நினைவிற்கு:- “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25,26).