No products in the cart.
Feb 27. போவோம் வாருங்கள்!
“அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்” (மாற்கு 4:35).
பூமிக்குரிய வாழ்க்கை இங்கே கடல் பிரயாணத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. நீங்கள் வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. சிலர் நீந்தி கடக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நீங்கள் நீந்தி கடப்பதில்லை; இரட்சிப்பின் பெருங்கடலை ஏறி கடந்து செல்லுகிறீர்கள். படகு ஓட்டியாகிய இயேசு உங்களோடுகூட இருக்கிறார்.
அக்கரையிலிருந்து இக்கரைக்கு வந்து, இக்கரையிலிருந்து அக்கரைக்கு உங்களை அழைத்துச் செல்லக்கூடியவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. உலகத்திலுள்ள தத்துவஞானிகளும், மேதைகளும் இக்கரையில் உள்ளவர்கள்தான். பூமிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான். அவர்களுக்கு அக்கரையாகிய பரலோக ராஜ்யத்தைக் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. தங்களுடைய சுயஞானத்தினால், சுய அறிவினால் அக்கரையைச் சேர்ந்துவிடலாம் என்று முயற்சிக்கிறார்கள். அவர்களை நம்பிச் செல்லுகிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பானவர்கள்.
ஆனால் அக்கரையாகிய பரலோக ராஜ்யத்திலிருந்து உங்களை நேசித்து, அடிமையின் ரூபமெடுத்து, பூமிக்கு இறங்கி வந்த தேவகுமாரன் ஒருவரே உங்களை அக்கரைக்கு கொண்டு சேர்க்க வல்லமையுள்ளவர். அவர் முடிவுபரியந்தமும் உங்களை வழி நடத்துகிறவர்.
அன்றைக்கு இயேசு சீஷர்களைப் பார்த்து அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அழைத்தபோது, அவர்கள் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் படகில் ஏறினார்கள். வழியிலே பலத்த காற்று அடித்தது. படகு அமிழத்தக்கதாக அலைகள் அதன் மேல் மோதின. ‘நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா’ என்று சீஷர்கள் கதறினார்கள் (மாற்கு 4:38).
வா என்று அழைத்த இயேசுவின் வார்த்தைக்கு இணங்கி ஜலத்தின் மேல் நடந்த பேதுரு, காற்று பலமாய் இருக்கிறதைக் கண்டு பயந்து, அமிழ்ந்து போகத் தொடங்கினார் (மத். 14:29,30). கர்த்தர் இடையிலே கைவிட்டு விட்டாரா? அமிழ்ந்து போக அனுமதித்தாரா? இல்லை. இயேசு பேதுருவின் கையை பிடித்து தூக்கி விட்டார். கடலுக்கும் காற்றுக்கும் கட்டளையிட்டு, “இரையாதே, அமைதலாயிரு” என்றபோது கடலின் கொந்தளிப்பு நின்றது. புயல் காற்றும் அமைதியாயிற்று. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார் (சங். 107:29,30).
தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலே வரும் புயல்களையும், சோதனைகளையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். உங்களுடைய நம்பிக்கை என்னும் நங்கூரம் இயேசுவின் மேல் இருக்கும்போது, கர்த்தர் உங்களை முற்றுமுடிய வழி நடத்தி அக்கரைச் சேர்ப்பார்.
நினைவிற்கு:- “அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை” (ஏசாயா 42:3,4).