AppamAppam - Tamil

Feb 17. பூரண வெற்றி!

“நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:14).

பழைய ஏற்பாட்டின் பிரமாணம் நியாயப்பிரமாணம். புதிய ஏற்பாட்டின் பிரமாணம் கிருபையின் பிரமாணம். பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணமானது, இஸ்ரவேலரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அங்கே பாவத்திற்கு ஜெயம் பெறும் வழியில்லை. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பாவ நிவாரணத்திற்காக ஆட்டுக்குட்டிகளைப் பலி செலுத்திக் கொண்டே வந்தார்கள். பூரண பரிசுத்தம் அவர்களில் காணப்படவில்லை. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் பாவமும் அக்கிரமமும் மூடப்பட்டிருந்ததே தவிர பாவத்தை மேற்கொள்ளும் கிருபை அங்கே காணப்படவில்லை.

புதிய ஏற்பாட்டிலே, கிறிஸ்து நமக்காக ஒரே தரம் பலியிடப்பட்டதைக் காணலாம். அந்தப் பலியினால் பாவமன்னிப்பைப் பெற்று, நீங்கள் பாவத்திலிருந்து ஜெயமுள்ளவர்களாய் விளங்கும்படி பரிசுத்த ஆவியின் வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் விழுந்து விழுந்து எழும்புகிற வர்களாயிராமல், வெற்றியுள்ள ஜீவியம் வாழ முடிகிறது. அப். பவுல், “ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோமர் 8:2) என்று எழுதுகிறார்.

இன்று அநேகர் ‘நாங்கள் செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்து வந்தோம்’ என்று வாழ்நாளெல்லாம் தோல்வியையே அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய ரசமாகிய ஆவியின் வல்லமை உங்களுடைய இருதயத்திற்குள் பரிசுத்தத்தைக் கொண்டு வருகிறது. நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறபடியினாலும், தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறபடியினாலும் நீங்கள் எப்பொழுதும் ஜெயங்கொண்டவர்களாய் விளங்க முடியும்.

கிறிஸ்து உங்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையைக் கொடுத் திருக்கிறார். பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேலர்தான் எகிப்தியருக்கும், நியாயப்பிரமாணத்துக்கும் அடிமைகளாய் இருந்தார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டின் பிரமாணமோ விடுதலையினால் வரும் கிருபையின் பிரமாணம். குமாரன் உங்களை விடுதலையாக்கியிருக்கிறார். எங்கே ஆவியானவர் உண்டோ அங்கே விடுதலை உண்டு. சத்தியம் உங்களை விடுதலையாக்கியிருக்கிறது.

பாருங்கள்! நியாயப்பிரமாணத்துக்கும், ஆவியின் பிரமாணத்துக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். வேதம் சொல்லுகிறது: “மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்” (ரோமர் 8:3).

தேவபிள்ளைகளே, நீங்கள் இன்று புதிய ஏற்பாட்டின் காலத்திலே, கிறிஸ்துவின் இரத்தத்தினால் வரும் கிருபையில் சார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

நினைவிற்கு:- “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.