AppamAppam - Tamil

Feb 14. புது இயந்திரம்!

“யாக்கோபு என்னும் பூச்சியே… உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்” (ஏசா. 41:14,15).

கர்த்தர் ஒரு சிறு பூச்சியை பெரிய யந்தரமாக மாற்றி விடுகிறார். பூச்சியைப் போல பலவீனமான மக்களைக்கொண்டு மலைகளைப் பெயர்க்கும் அற்புதங்களை செய்து விடுகிறார். அவர் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பேதைகளைத் தெரிந்து கொள்ளுகிறவர்.

இந்த வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். யாக்கோபு ஒரு பூச்சியைப்போல காணப்படுகிறார். பூச்சி என்பது எவ்வளவு சிறியதும், மென்மையுமானது! பூச்சிக்கு காண்டாமிருகத்தைப்போல பெலன் கிடையாது. கழுகுகள் போல் செட்டைகளும் கிடையாது. கர்த்தருடைய சிருஷ்டிப்பிலே அது ஒரு எளிய மென்மையான, தாழ்மையான, சாதாரணமான ஜந்து.

 ஒருவேளை, உலகத்தின் மத்தியிலே நீங்கள் ஒரு சாதாரணமானவராக காணப்படக்கூடும். உங்களுடைய குடும்பத்தில்கூட மற்றவர்கள் உங்களை ஒரு பூச்சியைப் போல எண்ணி அலட்சியமாக நடத்தக்கூடும். ஆனால் கர்த்தர் உங்களை எப்படிப்பட்டவராய்ப் பார்க்கிறார் என்பதே முக்கியம்.

உங்களைப் பூச்சியாக எண்ணிக்கொண்டிராதிருங்கள். கர்த்தர் உங்களை யந்தர மாக்குகிறார். மலைகளைக் கண்டு பதைபதைத்து நின்று விடாதேயுங்கள். மலை களை மிதித்து நொறுக்குகிற பலத்தை கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிறார். குன்றுகளைக் கண்டு சோர்ந்து போய் விடாதேயுங்கள். குன்றுகளை பதருக்கு ஒப்பாக்குவீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்களது ஆவிக்குரிய பெலன் அளவிடப்பட முடியாதது. “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்” என்று இயேசு சொன்னார் (அப். 1:8). இது பரலோகத்திலிருந்து வருகிற பெலன் என்பதால் நீங்கள் மலைகளை அசைத்து குன்றுகளை மிதிக்க முடியும்.

 அப். பவுலினுடைய சரீர தோற்றத்தைப் பார்த்தால் அது சாதாரணமானதாயிருந்தது. அவரை இடைவிடாமல் ஒரு முள் குத்தி வேதனைப்படுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் அவரோ என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு என்று முழங்கினார் (பிலி.4:13).

பூச்சியாகிய உங்களைக் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த விரும்புகிறார். நீங்கள் உங்களுடைய பெலவீனத்தை நோக்காதபடி கர்த்தருடைய பலத்தை நோக்கிப் பாருங்கள். உங்களுடைய ஞானத்தைச் சார்ந்திராதபடி கர்த்தருடைய ஞானத்தைச் சார்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய துயரங்களைக் குறித்து எண்ணாதபடி கர்த்தருடைய அபிஷேகத்தால் நிரப்பப்படுங்கள்.

 அநேகர் தங்களைப் பெலப்படுத்த கர்த்தர் வைத்திருக்கிற கிருபைகளை எண்ணிப் பார்க்காமல் தங்களைத் தாங்களே நோக்கிப் பார்த்து சோர்ந்துபோகிறார்கள். இதனால் கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்ய முடிவதில்லை. தேவபிள்ளைகளே, கர்த்தர் ஆவியின் பட்டயத்தை உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார். ஆகவே கர்த்தரின் இயந்திரமாக எழும்புங்கள், நிச்சயம் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபே 6:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.