AppamAppam - Tamil

Feb 12 – பிரியமான பலி!

“பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல” (சங். 51:16).

இயேசு கிறிஸ்து உங்களுக்காக தன்னையே பலியாக அர்ப்பணித்தவர். அந்தக் கல்வாரி பலிக்கு ஈடு இணையான பலி வேறு ஒன்றுமில்லை. எந்தத் தகனபலியும், பானபலியும் தன்னை அர்ப்பணித்த தேவகுமாரனின் பலியோடு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

தென் அமெரிக்காவில் மிஷனெரியாக பணியாற்றி மரித்த ஜிம் எலியட் தமது டைரியில், “இயேசு கிறிஸ்து என் ஆண்டவராக இருப்பதும், அவர் எனக்காக பலியாக மரித்ததும் உண்மையானால், நான் செய்யும் எந்தத் தியாகமும், நான் ஏறெடுக்கும் எந்த பலியும் பிரதானமாய் இருக்க முடியாது” என்று எழுதினார்.

 தேவனுக்கேற்கும் பலிகள் எவை? தாவீது சொல்லுகிறார், “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங். 51:17). நொறுங்குண்ட இருதயத்திலிருந்து வருகிற ஜெபமே அவருக்குப் பிரியம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆவியோடும் உண்மையோடும் எடுக்கப்படும் விண்ணப்பத்துக்கு அவர் செவி சாய்க்கிறார்.

நீங்கள் சாதாரணமான நிலையில் நான்கு மணிநேரம் ஜெபிக்கிறதைப் பார்க்கிலும் இருதயத்தை ஊற்றி நொறுங்குண்ட இருதயத்தோடு அரை மணி நேரம் கண்ணீரோடு ஜெபிப்பது அதிக பலனைத் தரும். கர்த்தர் பாரம்பரிய ஜெபங்களிலோ, கிளிப்பிள்ளை ஜெபங்களிலோ, எழுதி வைத்து வாசிக்கும் ஜெபங்களிலோ பிரியப்படுகிறவரல்ல. நீங்கள் அவரிடத்தில் மனம் திறந்து கேட்க வேண்டுமென்று அவர் பிரியப்படுகிறார். நொறுங்குண்ட இருதயத்தின் ஜெபத்தை அவர் ஒருபோதும் புறக்கணித்து தள்ளுவதில்லை.

தாவீது தன் வாழ்க்கையிலே, சத்துருக்கள் தூஷிப்பதற்கு இடம் கொடுத்து விட்டார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்துகாட்ட தவறிவிட்டார். இதை எப்படி சரிசெய்வது? கர்த்தருக்கு ஏதோ பத்து மாடுகளை அடித்து பலியிட்டுவிட்டால் போதுமா? ஆயிரம் கொழுத்த ஆடுகளைக் காணிக்கையாக கொடுத்து விட்டால் போதுமா? இல்லை.

கர்த்தரோ நருங்குண்டதும், நொறுங்குண்டதுமான இருதயத்தைத்தான் நோக்கிப் பார்க்கிறார். தாவீது உபவாசம் பண்ணி மனங்கசந்து தன் பாவங்களுக்காக அழுத போது, கர்த்தர் அந்த நொறுங்குண்ட இருதயத்தை சிறந்த பலியாக ஏற்றுக் கொண்டார். கல்வாரி கிருபாசனத்தண்டை வரும்போது நருங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு அவரைக் கிட்டிச் சேருங்கள். அவர் உங்களை அங்கீகரிப்பார். மீண்டும் உங்களோடு உடன்படிக்கை செய்வார். கர்த்தர் விருப்பப்படுகிற பலி ஸ்தோத்திர பலி. ‘ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்…இரட்சிப்பை வெளிப்படுத்துவேன்’ (சங். 50:23) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவபிள்ளைகளே, அவர் உங்களுக்குக் கொடுத்தருளிய இரட்சிப்பு, நித்திய ஜீவன் மற்றும் அபிஷேகம் ஆகியவற்றுக்காக நீங்கள் செலுத்தும் ஸ்தோத்திர பலிகள் அவர் உள்ளத்தை மகிழ்விக்கட்டும்.

நினைவிற்கு:- “ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வா உம்முடைய புகழை அறிவிக்கும்” (சங். 51:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.