AppamAppam - Tamil

Feb 03 – பராக்கிரமசாலியாய்!

“கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலட்சை அவர்களுக்கு உண்டாகும்” (எரே. 20:11).

கர்த்தர் பராக்கிரமசாலியானவர். எரேமியா தீர்க்கதரிசி அவரை “பயங்கரமான பராக்கிரமசாலி” என்று குறிப்பிடுகிறார். கர்த்தர் உங்கள்மீது அன்புள்ளவராயும், உங்களுடைய விரோதிகளின் மேல் அவர் யுத்தம் செய்கிறவராயும் இருக்கிறார். ஆகவே உங்களைத் துன்பப்படுத்துகிறவர்கள் ஒருபோதும் உங்களை மேற்கொள்ளுவதில்லை.

நீங்கள் எவ்வளவுதான் நேர்மையாய் இருந்தாலும், மற்றவர்கள் மேல் அன்பு பாராட்டினாலும், அவர்கள் உங்களை புரிந்துகொள்ளாமல், துன்பப்படுத்த நினைப்பார்கள். நீங்கள் மோட்டார் வாகனத்தை எவ்வளவுதான் சாலை விதிகளை கடைப்பிடித்து ஒழுங்காக ஓட்டினாலும், எதிரே வரும் லாரி ஓட்டுபவன் பெரிய துன்மார்க்கனைப்போல உங்கள்மேல் மோத வருகிறதை உணர முடியும். காரணமில்லாமல் உங்கள்மேல் கோபப்படுகிறவர்களுண்டு. அர்த்தமில்லாமல் எரிச்சல்படுகிறவர்களுமுண்டு.

ஆனால் கர்த்தர் எப்போதும் உங்கள் பட்சத்தில் உங்களோடிருக்கிறார். இதுவரை உங்களைத் துன்பப்படுத்தினவர்கள் தொடர்ந்து துன்பப்படுத்திக் கொண்டேயிருக்க முடியாது. உங்களை மேற்கொள்ளும் சக்தி அவர்களைவிட்டு எடுபட்டுப்போகும். அவர்கள் செய்ய நினைத்த காரியம் வாய்க்காது. மறக்கக்கூடாத நித்திய இலட்சை அவர்களுக்கு உண்டாகும்.

ஒரு சகோதரன் வெளிதேசத்தில் பணியாற்றி விட்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பினார். இங்குள்ள அநேகர் அவரைப் பொறாமையினால் பகைத்தார்கள். அவர் புதிதாக கட்டிய வீட்டில் வாழக்கூடாதபடி செய்வினை செய்தார்கள். ஆனால் அவரோ கர்த்தரை உறுதியாய் பற்றிப்பிடித்துக் கொண்டார். செய்வினை செய்தவர்கள் மீண்டும் மீண்டும் செய்தும் ஒன்றும் பலிக்காததினாலே மனம் உடைந்தார்கள். மாத்திரமல்ல, அவர்கள் செய்திருந்த செய்வினையின் வல்லமை அவர்களையே திருப்பித் தாக்கியது.

இயேசு சொன்னார், “உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்”. அவர் அன்பின் சொருபிதான். ஆட்டுக்குட்டியானவர்தான். அதே நேரத்தில், யூதாவின் ராஜசிங்கமாகவும் விளங்குகிறார். சேனைகளின் கர்த்தராகவும் விளங்குகிறார். “உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று சொன்ன கர்த்தர், உங்களுக்கு விரோதமாய் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் அழித்துப்போட வைராக்கியம் கொண்டிருக்கிறார். “அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?” (யோபு 9:4).

தேவபிள்ளைகளே, உங்களுக்கு விரோதமாக துன்மார்க்கமான மனுஷர் எழும்பும்போது, உங்களுக்காக நீங்கள் வழக்காடாதேயுங்கள். கர்த்தருக்குப் தெரியப்படுத்துங்கள். பராக்கிரமசாலியான கர்த்தர் தாமே உங்களுக்கு நியாயம் செய்வார்.

நினைவிற்கு:- “கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்” (ஏசா. 42:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.