AppamAppam - Tamil

Jan 25 – சுவர் பக்கமாய்!

“அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்புறமாகத் திருப்பிக் கொண்டு, கர்த்தரை நோக்கி:” (ஏசா. 38:2).

“எசேக்கியா தன் முகத்தைச் சுவர் பக்கமாய் திருப்பி” என்று வேதம் சொல்லுகிறது. அதோடல்லாமல், சுவர் பக்கமாய் முகத்தைத் திருப்பினவர் கர்த்தரை நோக்கிப் பார்த்தார். கண்ணீரோடு ஜெபம் பண்ண ஆரம்பித்து விட்டார்.

 தாவீது சொல்லுகிறார், “சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்” (சங். 20:7).

நீங்கள் எந்த பக்கமாய் திரும்பியிருக்கிறீர்கள் என்பது, யார் மீது உங்கள் நம்பிக்கை இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. சிலர் தங்களுடைய முகங்களை தங்கள் மேலேயே பதிய வைக்கிறார்கள். தங்களுக்கு இருக்கும் திறமைகள், தங்களுக்கு இருக்கும் அறிவு, பெலன், பணத்தினால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று சுய ஞானத்தையே நம்பியிருக்கிறார்கள்.

சிலர் தங்கள் பிள்ளைகளையும், இனத்தவர்களையும் நோக்கிப் பார்க்கிறார்கள். சிலர் சூழ்நிலைகளில் உதவி செய்யக்கூடியவர்களை நோக்கிப் பார்க்கிறார்கள். சிலர் தங்கள் அழகை நம்புகிறார்கள். சிலர் தங்கள் திறமைகளை நம்புகிறார்கள்.

ஆனால் எசேக்கியா ராஜாவோ, அவைகளில் எந்த பக்கமும் திரும்பாமல், சுவர் பக்கமாய் திரும்பிவிட்டார். ‘ஆண்டவரே, நான் வேறு எதன் மேலும் நம்பிக்கை வைக்கவில்லை, உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்’ என்று ஜெபிக்க ஆரம்பித்தார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் எப்பொழுதாகிலும் சுவர் பக்கமாய் திரும்பியிருக்கிறீர்களா? சுவர் அருகிலே நின்று பாருங்கள். வேறு எந்த காரியத்தையும் உங்களால் பார்க்க முடியாது. சுவரை மட்டுமேதான் பார்க்க முடியும். அதைப் போலவே உங்கள் பார்வையில் கர்த்தர் மட்டுமே இருக்கட்டும்.

எசேக்கியா ராஜா, அந்த வியாதியின் நேரத்தில், மரணத் தருவாயில் இருந்தபோது, வைத்தியர்கள் பக்கமோ, பரிகாரிகள் பக்கமோ திரும்பாமல், சுவர் பக்கமாய் மட்டுமே திரும்பினார். கர்த்தரை நோக்கி கண்ணீரோடு ஜெபம் பண்ணினார். கர்த்தருடைய பதில் உடனே அவருக்கு கிடைத்தது. கர்த்தர் அவருடைய வியாதியை குணமாக்கினது மட்டுமல்ல, அவருடைய ஆயுசு நாளில் பதினைந்து ஆண்டுகளைக் கூட்டிக் கொடுத்தார்.

தாவீது சொல்லுகிறார். “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங். 121:1,2).

ஏசாயா சொல்லுகிறார், “சித்திர வேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்” (ஏசா. 42:17). தேவபிள்ளைகளே, சுயத்தைப் பார்க்காதேயுங்கள். இனத்தவர்களைப் பார்க்காதேயுங்கள். சூழ்நிலைகளைப் பார்க்காதேயுங்கள். சுவர் பக்கமாய்த் திரும்பி கர்த்தரை நோக்கிப் பார்த்து ஜெபியுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள்” (சங். 125:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.