AppamAppam - Tamil

Jan 17 – சித்தத்தின்படி!

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21).

“கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுவது எளிது. ஆனால் பரலோகப் பிதாவினுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் ஒப்புக்கொடுப்பது கடினமானது. கர்த்தரை நேசிக்கிறேன் என்று சொல்லுவது எளிது. ஆனால் கர்த்தருடைய எதிர்பார்ப்பின்படி அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதுதான் கடினமானது. விசுவாசிகளாய் விளங்குவது எளிது; ஆனால் தேவனுடைய பூரண சித்தத்தைச் செய்ய அர்ப்பணிப்பதுதான் கடினம்.

ஒரு முறை ஒரு சகோதரியிடம் ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியத்தைக் குறித்து வேதத்திலிருந்து விளக்கிக் காண்பித்தபோது, அவர்கள் அதைக் கேட்கப் பிரியப்படவில்லை. ‘நான் கர்த்தரை நேசிக்கிறேன். ஆகவே நான் பரலோகம் போய் விடுவேன்’ என்றார்கள். இயேசு சொன்னார், “நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10).

கர்த்தருடைய சித்தத்தின்படி செய்யாமல், கர்த்தரை நோக்கிக் கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லிக் கொண்டிருப்பதால் ஒரு பிரயோஜனமுமில்லை. கர்த்தரில் அன்புகூருகிறவன், விடவேண்டிய பாவங்களை விடவேண்டும், நிறைவேற்ற வேண்டிய பிரமாணங்களை நிறைவேற்ற வேண்டும், தேவனுடைய சித்தத்திற்குத் தன்னை பரிபூரணமாய் ஒப்புக்கொடுத்து முன்னேறிச் செல்லவேண்டும்.

ஒரு முறை பிரசித்தி பெற்ற ஊழியரான ஸ்பர்ஜன் ஊழியத்திற்காக சிறைச்சாலை சென்றார். அங்கேயுள்ள குற்றவாளிகளைப் பார்த்து ‘நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா?’ என்று கேட்டபோது, “ஆம், நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள். அவர்கள் விசுவாசித்தார்கள். ஆனால் பாவத்தை விடவில்லை. ஆகவேதான் அவர்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்படியான நிலை ஏற்பட்டது.

யோனாவைப் பாருங்கள்! அவர் கர்த்தரைக் குறித்து பிரசங்கித்த ஒரு வல்லமயான ஊழியக்காரன்தான். ஆனால் கர்த்தர் நினிவேக்குப் போகச் சொன்னபோது அவரோ தேவசித்தத்தை மீறி தர்ஷுசுக்குப் போகும்படிக் கப்பல் ஏறினார். கர்த்தர் அதை ஏற்றுக்கொண்டாரா என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவேதான் கர்த்தர் யோனாவின் வாழ்க்கையில் ஒரு கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தி, மீனை ஆயத்தப்படுத்தி விழுங்கும்படி செய்து, தேவசித்தத்தை நிறைவேற்ற வேண்டிய முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார்.

தாவீதின் ஜெபமெல்லாம் “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக” (சங். 143:10) என்பதாகவே இருந்தது. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய ஒப்புக் கொடுக்கும்போது, கர்த்தருடைய குடும்பத்திற்குள் காணப்படுவீர்கள். அவரோடு ஐக்கியப்பட்டிருப்பீர்கள். ஆகவே கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள்.

நினைவிற்கு:- “இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்” (எபி. 13:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.