AppamAppam - Tamil

Jan 13 – சத்திய ஆவி!

“…என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவா. 14:16).

  சத்திய ஆவியானவர் என்று சொல்லும்போது, அவர் வெறுமனே சில ஆவிக்குரிய அனுபவங்களை தருபவர் என்றும், வரங்களை மட்டுமே தருகிறவர் என்றும் அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் ஆவியானவர் ஆவியின் வரங்களையும், வல்லமைகளையும் உங்களுக்குள் கொண்டு வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் உங்களோடு தங்கி, உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார்.

உங்கள் வீட்டிற்கு அன்பான ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் கலர் பேப்பர்களால் சுற்றப்பட்ட அழகான பரிசுப் பொருளை உங்களுக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார். சிறு பிள்ளைகள் அந்த பரிசு பொருளிலே சுற்றியிருக்கிற கலர் பேப்பர் வேண்டும், அதை சுற்றி கட்டியிருக்கிற ரிப்பன் வேண்டுமென்று விரும்பி எடுத்துக் கொள்ளுகிறார்கள். வாலிபர்களோ, உள்ளேயிருக்கிற அந்த பரிசு பொருள் தங்களுக்கு வேண்டுமென்று அதன் மேல் நோக்கமாயிருக்கிறார்கள். ஆனால், வயது முதிர்ந்தவர்களோ பரிசைக் கொண்டு வந்த அந்த அருமையானவர்களை உபசரிப்பதில் முக்கியத்துவம் காட்டுகிறார்கள்.

 இதுபோலவே, சிலர் பரிசுத்த ஆவியை பெற்றபோது, தங்களுக்கு கிடைத்த அனுபவங்களைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அபிஷேகம் பெற்ற போது, அவர்களுடைய சரீரம் உலுக்கப்பட்டதையும், தரிசனம் கண்டதையும் பற்றியே பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் ஆவிக்குரிய குழந்தைகள். இவர்களது அனுபவம் கலர் பேப்பரைப் போன்றது. வேறு சிலர், ஆவியானவரைவிட அவர் கொண்டுவந்த வரங்களையும், வல்லமையையுமே மேன்மை பாராட்டுகிறார்கள். நீங்களோ, ஆவியானவரையே மேன்மைப்படுத்துவீர்களாக.

பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குப் போதிக்கிறவர்! சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் (யோவா. 16:13). நீங்கள் சகல சத்தியத்திற்குள்ளும் சென்றால்தான் பூரணத்தைப் பெற முடியும். எப்படி ஒரு குழந்தை முதல் வகுப்பிலிருந்து, படிப்படியாக மேல் படிப்பிற்கு சென்று கொண்டிருக்கிறதோ, அதுபோலதான் ஆவியானவர் உங்களுக்கு பல சத்தியங்களை ஒவ்வொன்றாகப் போதித்து உங்களை முன் நோக்கி நடத்திக் கொண்டு வருகிறார்.

எவர்கள் எல்லாம் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, இயேசுவின் பிள்ளைகளாகிறீர்கள் (யோவா. 1:12). ஆவியினால் பிறப்பது பிள்ளையின் அனுபவம். அதே நேரம், கர்த்தருடைய ஆவியினால் நடத்தப்படுவது முதிர்ச்சியடைந்த புத்திரரின் அனுபவம்.

தேவபிள்ளைகளே, ஆவிக்குரிய ஜீவியத்திலே நீங்கள் முன்னேற வேண்டும். ஆவியானவர் உங்களுக்குள் தங்கி வாசம்பண்ணி, ஒவ்வொரு நிமிடமும் உங்களை வழி நடத்த ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நினைவிற்கு:- “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவா. 14:26).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.