AppamAppam - Tamil

Jan 11 – சகலவித நன்மைகளையும்!

“நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும்…” (1 தீமோ. 6:17).

நம் தேவன் சகலவிதமான நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிற தேவன். சிலர் தேவனை பாடுகளுக்குட்படுத்துகிறவராகவே காண்கிறார்கள். எப்பொழுதும் “நான் யோபுவைப் போல சோதிக்கப்படுகிறேன்” என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால்தான் அவர்களால் கர்த்தர் தருகிற சம்பூரணமான ஆசீர்வாதங்களை முழுமையாய் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.

உலகத்தில் உங்களுக்குப் பாடுகளுண்டு. உபத்திரவங்களுண்டு. அதே நேரத்தில், கர்த்தர் உங்களுக்கு பல நன்மையான காரியங்களையும் வாக்குப்பண்ணியிருக்கிறார். மற்றவர்களைப் பார்க்கிலும் தம்முடைய பிள்ளைகளை மேன்மைப்படுத்தி, ஆசீர்வாதங்களைத் தரவும் காத்திருக்கிறார்.

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, நீங்கள் சந்தோஷமாய் அதை ஏற்றுக்கொண்டு உலக வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சிறந்தோங்கி செழிக்க வேண்டும். உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகவேதான் அப். பவுல், “…நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்” (பிலி. 4:11,12) என்று குறிப்பிடுகிறார்.

  தேவபிள்ளைகளே, கர்த்தர் எவ்வளவாய் உங்களை நேசித்து உங்களுக்காக உலகத்தை சிருஷ்டித்தார்! சூரியன், சந்திரன் இவைகளோடு நல்ல சீதோஷ்ண நிலைகளையும், நல்ல கனிவர்க்கங்களையும், மரங்களையும், செடி கொடிகளையும் உருவாக்கியிருக்கிறார். அன்புள்ள பரம தகப்பனாக உங்களோடுகூட இருந்து, தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல இரங்குகிறார். மட்டுமல்ல, நீங்கள் அனுபவிப்பதற்கு சகலவிதமான நன்மைகளையும் உங்களுக்குச் சம்பூரணமாய் கொடுக்கிற ஜீவனுள்ள தேவனாயிருக்கிறார்.

நீங்கள் அவரைப் பார்த்து மனம் திறந்து, “அப்பா, பிதாவே” என்று அழைக்க முடியும். ஜெபித்து, அவரிடத்திலிருந்து உச்சிதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான் என்று வேதம் சொல்லுகிறது. நீங்கள் குறைவுபட்டு, வாட வேண்டும் என்பது ஒருநாளும் அவருடைய சித்தமல்ல, பிரியமுமல்ல. “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” என்பதே கர்த்தருடைய சித்தமாய் இருக்கிறது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய கடன் பிரச்சனை மாற வேண்டுமா? உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாய் உயர்த்தப்பட வேண்டுமா? நல்ல வேலையில் அமர வேண்டுமா? ஆவியின் வரங்களினாலும், கிருபையினாலும் நிரப்பப்பட வேண்டுமா? ஆத்துமாக்களைக் கர்த்தருக்கென்று அதிகமாய் ஆதாயம் செய்ய வேண்டுமா? சம்பூரணமாய் கொடுக்கிற தேவனிடத்தில் கேளுங்கள். நீங்கள் விசுவாசத்தோடு கேட்பீர்களென்றால், நிச்சயமாகவே பெற்றுக்கொள்ளுவீர்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார்” (2 கொரி. 9:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.