AppamAppam - Tamil

Jan 9 – சமாதானப் பிரபு!

“அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை” (ஏசாயா 9:7).

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆழ்ந்த யோசனை செய்கிறார்கள். தகப்பன் தன் வீட்டார் பெயர்களைச் சொல்லுவார். தாய் தன் வீட்டுப் பெயர்களில் ஒன்றை விரும்புவாள். பின் திருமறைப் பெயரும் ஒன்று தீர்மானித்து வைத்து, மூன்று நான்கு பெயர்களாக்கி விடுவார்கள். முடிவில் வைத்த பெயரை சொல்லிக் கூப்பிடாமல், ஒரு செல்லப் பெயர் சொல்லி அழைப்பதுதான் வழக்கம்.

ஏசாயா தீர்க்கதரிசி கிறிஸ்துவின் குணாதிசயங்களை வைத்து அவருக்கு பல பெயர்களைச் சூட்டுகிறார். ஏசாயா 9:6-ல் ஐந்து பெயர்களைக் காணலாம். வேத புத்தகத்தில் சுமார் 272 பெயர்கள் கர்த்தரை குறிப்பவையாக இருக்கின்றன.

அடிமை வாழ்விலும், அந்நிய ஆட்சியிலும் அடிபட்ட இஸ்ரவேலருக்கு நம்பிக்கையூட்ட மேசியாவின் காலம் சமாதானமாக இருக்கும் என்றும், அவர் சமாதான பிரபுவாக வருவார் என்றும் ஏசாயா ஏங்கினார். இயேசுவின் பிறப்பில் தேவதூதர்களும் நற்செய்தி கூறி, இயேசுவின் பிறப்பில் பூமியில் சமாதான ஆட்சி வரும் என்கிறார்கள். ஆனால் யூதர்கள் இயேசுவில் மேசியாவைக் காணாததால் சமாதானத்தையும் அறியவில்லை.

‘சமாதான பிரபு’ என்னும் பெயர், அவருடைய சமாதானமான ஆளுகையைக் குறிக்கும். குப்தர்கள் அரசாட்சியின் காலத்தை “பொற்காலம்” என்று அழைத்தனர். ஏன்? சமாதானமான வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, செழிப்பான வாழ்க்கை. சமாதானமிருந்தால்தான் இவையெல்லாம் தானே வரும். தற்கால உலகம் சமாதான பிரபுவின் ஆட்சியின் கீழ் இல்லாமல் உலகத்தின் அதிபதியின் கீழ் இருக்கிறது (யோவா. 14:30, 16:11). பாவம் செய்யும் மக்களும், பிசாசானவனும் சேர்ந்துதான் உலகில் சமாதானத்தை இல்லாமலாக்குகிறார்கள். கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு என்றும் சமாதானம் உண்டு.

மூடிப் பிரசங்கியாரின் பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர் தன் மனசாட்சியால் குத்தப்பட்டார். ஆனாலும், அவருக்கு இயேசுவை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை. அவர் கோபமாக மூடிப் பிரசங்கியாரிடம் வந்து, “நீங்கள் இந்த ஊருக்கு வரும் முன் என் பாவத்தைக் குறித்து நான் கவலைப்படவில்லை, நீங்கள் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பேசும்போது, என் உள்ளம் நரகம் போல் எரிகிறது. நீங்கள் இரட்சிப்பு என்று சொல்லுகிறீர்கள். ஆனால் இது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது. உங்கள் கூட்டங்களுக்கு வராமலுமிருக்க என்னால் முடியவில்லை. நீங்கள் இந்த ஊரை விட்டுப் போய் விட்டால் எனக்குப் பழைய சமாதானமிருக்கும்” என்றார். பிசாசின் பிடியில் அவர் இருந்ததால், உண்மை சமாதானத்தின் மேன்மையை அவர் அறியாதவராய் இருந்தார்.

தேவபிள்ளைகளே, சமாதானபிரபு அளிக்கும் உண்மையான சமாதானம் உங்கள் உள்ளத்தில் உண்டா? அல்லது உணர்ச்சியற்ற, மழுங்கிப் போன இருதயத்தை சமாதானம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா? இயேசுவண்டை வாருங்கள். அவர் உங்கள் உள்ளத்தில் எடுபடாத சமாதானத்தைத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்” (சங். 29:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.