AppamAppam - Tamil

Dec 28 – வேதத்தின் மகத்துவங்கள்!

“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்” (ஓசியா 8:12).

செய்திகளை வாயினால் சொன்னால் மறந்துவிடும் என்பதற்காக பெரியவர்கள் அவற்றை எழுதிக் கொடுத்து அனுப்புவார்கள். தேசத்தின் சட்டத்திட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்ட சட்டத்தின்படியே அரசாங்கம் செயல்படுகிறது. அதைப்போலவே கர்த்தர் தம்முடைய மகத்துவங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

உலக எழுத்துக்களுக்கும், கர்த்தருடைய எழுத்துக்களுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. உலக எழுத்துக்களில் அறிவு இருக்கலாம். ஆபாசமும் இருப்பதுண்டு. ஆனால் கர்த்தருடைய எழுத்துக்களிலே ஆவியிருக்கிறது, ஜீவனிருக்கிறது. உலக எழுத்துக்கள் காலப்போக்கில் மறைந்துபோய்விடும். ஆனால் கர்த்தருடைய எழுத்துக்களோ, வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் மறைந்து போவதேயில்லை.

உலக எழுத்துக்களைக்கொண்டு சாத்தானை எதிர் நிற்க முடியாது. ஆனால் கர்த்தர் எழுதியிருக்கிற எழுத்துக்கள் ஆவியின் பட்டயமாய் இருக்கிறபடியினால், அதைக் கொண்டு சாத்தானை எதிர்த்து நிற்க முடியும். இயேசுவை சோதிக்க சோதனைக்காரன் வந்தபோது வேதவசனங்களின் மூலமாகத்தான் அவர் அவனுடன் யுத்தம் செய்தார். ஒவ்வொரு முறையும் ‘எழுதியிருக்கிறதே; எழுதியிருக்கிறதே’ என்ற வசனங்களைச் சுட்டிக் காண்பித்தபோது சாத்தான் அவரைவிட்டு விலகிப்போனான்.

ஒருவன் இரயில் பெட்டியில் ஏறும்போது, கடைசி நேரத்தில் அங்கே “பெண்கள் மட்டும்” என்ற வாசகத்தை பார்த்துவிட்டு வேறு பெட்டி நோக்கி விரைந்தான். பெண்களுக்கான இரயில் பெட்டியில் ஒரு ஆண் மகன் எவ்வளவுதான் பணமும் பலமும் நிறைந்திருந்தாலும் உட்கார முடியாது. காரணம், பெண்கள் என்று “எழுதப்பட்டிருக்கிறதே”.

சாதாரண எழுத்துக்களே அவ்வளவு வல்லமையாய் இருக்குமென்றால், வேத வசனங்களுக்கு எவ்வளவு அதிகமான வல்லமையிருக்கும்! கர்த்தர் ஒரு மனிதனை நியாயந்தீர்க்கும்போது, ‘எழுதப்பட்ட தன்னுடைய வசனத்தின்படிதான் நியாயம் தீர்ப்பார். புத்தகங்கள் அவருக்கு முன்பாகத் திறக்கப்படும். அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைவார்கள்’ (வெளி. 20:12).

பேனா முனை பெரியதா அல்லது வாள் முனை பெரியதா என்று பள்ளிக்கூட மாணவர்களுக்கு பட்டிமன்றம் வைப்பார்கள். முடிவில் அவைத் தலைவர்கள் பேனா முனைதான் வல்லமையுள்ளது என்று தீர்ப்பளிப்பார்கள். எழுதப்பட்ட வார்த்தைகள் வாளை விட வலிமையானது. யோபு பக்தன், “நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், ஈயஎழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” (யோபு 19:23,24) என்று விரும்பினார். தேவபிள்ளைகளே, யோபு விரும்பியதுபோலவே அந்த எழுத்துக்கள் புத்தகத்தில் வரையப்பட்டிருக்கின்றன. என்றென்றைக்கும் அவை நிலை நிற்கின்றன.

நினைவிற்கு:- “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே” (சங். 119:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.