AppamAppam - Tamil

Dec 18 – விடுதலையாக்கப்பட்டாய்!

“ஸ்திரியே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்…” (லூக். 13:12).

இயேசு கிறிஸ்து உங்களை விடுதலை செய்கிறவர். சாத்தானுடைய சகல கட்டுகளிலிருந்தும் அந்தகாரத்தின், வல்லமையிலிருந்தும் விடுதலை செய்கிறவர். நோயையும் பெலவீனத்தையும் நீக்கி உங்களை விடுதலை செய்கிறவர்.

இயேசு இந்த உலகத்திலிருந்த நாட்களில், பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியையுடைய ஒரு ஸ்திரீயை தேவாலயத்திலே சந்தித்தார். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். அந்த நாள் ஓய்வுநாளாய் இருந்தபோதிலும் கர்த்தர் அதைக் குறித்துப் பொருட்படுத்தாமல் அவளை சுகமாக்கி விட்டார். அதைக் கண்டு ஜெப ஆலயத் தலைவன் முணுமுணுத்தான். “வேலை செய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே. அந்த நாட்களிலே இயேசு வந்து சுகமாக்கி இருக்க வேண்டும். ஓய்வு நாளில் அப்படிச் செய்யலாகாது” என்றான்.

 அதற்கு இயேசு சொன்ன பதிலைப் பாருங்கள். அதில் மூன்று குறிப்புகள் இருக்கின்றன. முதலாவது, இவள் ஆபிரகாமின் குமாரத்தி. இரண்டாவது, இவளை பதினெட்டு வருஷமாய் பிசாசானவன் கட்டி வைத்திருந்தான். மூன்றாவது, இவள் கட்டவிழ்க்கப்பட வேண்டும். பதினெட்டு வருஷமாய் கூனியாய் இருந்தவளுக்கு இன்னும் ஒரு நாள் கூனியாயிருப்பது கடினமான ஒரு காரியமாய் இருந்திருக்காது.

ஆனால் கர்த்தர், அவள் ஆபிரகாமின் குமாரத்தி, அவள் சுகமடைவதில் ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது என்று விரும்பினார். ஜெப ஆலயத் தலைவனோடு கருத்து வேற்றுமை வருவதைக் குறித்தும் அவர் கவலைப்படவில்லை. ஆனால் அந்த ஏழைக் கூனியாய் இருப்பவள், அன்றைக்கே சுகமாக வேண்டுமென்று விரும்பினார். ஏனென்றால் அவள் ஆபிரகாமின் குமாரத்தி.

 இன்று நீங்கள் ஆபிரகாமின் குமாரர்களும், தாவீதின் குமாரர்களும், இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். விசுவாச மார்க்கத்தார் எவர்களோ அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று கலா. 3:7-ல் வாசிக்கலாம். நீங்கள் இயேசுவின் பிள்ளைகளாயிருக்கிறீர்கள் என்று யோவான் 1:12-லே அறிந்து கொள்ளலாம். அப்படியிருக்க நீங்கள் விடுதலையடையவும், சுகமடையவும் சிறிதும் காலம் தாமதிக்கக் கூடாது. பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியினால் பாதிக்கப்பட்டுக் கூனியாய் இருந்தவளை ஓய்வு நாளிலே விடுதலையாக்கின கர்த்தர், இன்றைக்கு உங்களையும் விடுதலையாக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார்.

உங்களுக்கு வியாதி எதினால் வருகிறது என்பதைக் கண்டு பிடியுங்கள். இந்த கூனியாய் இருந்தவளைக் கட்டி வைத்தது சாத்தான் என்று இயேசு சொன்னார் (லூக். 13:16). “…பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவா. 3:8).

தேவபிள்ளைகளே, உங்களுடைய வியாதி கீழ்ப்படியாமையினாலும், பாவங்களினாலும் வந்திருக்குமென்றால், அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுங்கள். அப்போது கர்த்தர் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.