AppamAppam - Tamil

Dec 13 – விசுவாசத்தினாலே ஆபிரகாம்!

“விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்திரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்” (எபி. 11:8).

 ‘கர்த்தரே என்னை நடத்துவார்’ என்பதில் ஆபிரகாமுக்கு உறுதியான விசுவாசமிருந்தது. கர்த்தர் போ என்றுச் சொன்னபோது போகும் இடம் இன்னதென்று அறியாது, போகும் இடத்தில் வரக்கூடிய பாடுகளைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாது, விசுவாசத்துடனே புறப்பட்டுப் போனார்.

ஒரு ஊழியர் தனக்கு மிகப் பெரிய விசுவாசம் இருக்கிறது என்று மிகவும் பெருமையாய் தம்பட்டம் அடித்துக் கொள்ளுவார். ஒரு முறை ஒரு உயர்ந்த மலையின் மேல் ஏறிச் சென்றபோது கால் சறுக்கி உயரத்திலிருந்து ஒரு மரத்தின் மேல் விழுந்தார். இந்த மரத்தின் கிளை ஒன்றை உறுதியாய் பற்றிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தார். கீழே பார்த்தால் மரக்கிளை முறிந்து விடுமோ என்று பயம். இன்னொரு பக்கம் எவ்வளவு நேரம் தொங்கிக்கொண்டிருப்பது?

ஊழியர், ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்’ என்று கதறினார். உதவ யாரும் முன்வரவில்லை. மீண்டும் உரத்த சத்தமாய் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். கர்த்தர் அவரைப் பார்த்து மெல்லிய குரலில், ‘மகனே, நீ தொங்கிக்கொண்டிருக்கிற அந்த கிளையிலிருந்து உன் கைகளை விட்டு விடு’ என்றார். ஆனால், அவர் ‘ஆண்டவரே, கீழே பாதாளம் அல்லவா இருக்கிறது. நான் கீழே விழுந்து நொறுங்கி விடுவேனே’ என்று கதறினார். கர்த்தர் சொன்னார், ‘நீ என்னை விசுவாசித்து உன் கையை விடு’. ஆனால், அவருக்கோ கிரியையுள்ள விசுவாசம் இல்லை. ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன என்று வேதம் கேட்கிறது (யாக். 2:14).

அவர் நீண்ட நேரம் தொங்கிக்கொண்டேயிருந்தார். முடிவாக, அவர் தொங்கிய கிளை முறிந்து கிளையோடு விழுந்தார். என்ன ஆச்சரியம்! சில நாட்களுக்கு முன்னே சினிமாகாரர்கள் படம் எடுக்கக் கட்டியிருந்த பெரிய வலையில் விழுந்து எந்தச் சேதமுமில்லாமல் பாதுகாக்கப்பட்டார். முதலிலேயே கையை விட்டிருந்தால் கை வலியும், வேதனையும், மரண பயமும் நீங்கியிருந்திருக்குமே என்று எண்ணி ஊழியர் வேதனைப்பட்டார்.

ஆபிரகாமைப் பார்த்து ஆண்டவர் கையை விடும்படி சொன்னார். அதுவரை அவருடைய கைகள் இனத்தாரையும், ஜனத்தாரையும், உறவினர்களையும் பற்றிக்கொண்டிருந்தது. ஆனால் கர்த்தர் அழைத்தபோது, ஆபிரகாம் விசுவாசத்தினாலே எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல், புறப்பட்டுப்போனார். அதுதான் ஆபிரகாமுடைய விசுவாசத்தின் சிறப்பு. இதன் காரணமாகத்தான் அவர் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆபிரகாமின் சந்ததியில், விசுவாச பரம்பரையில் வந்திருக்கிறீர்கள் என்பதை மறந்து போகாதேயுங்கள். ஆபிரகாமின் குமாரனும், ஆபிரகாமின் தேவனுமாயிருக்கிற கிறிஸ்துவைத் தொழுது கொள்ளுகிற உங்களுக்கு ஆபிரகாமின் விசுவாசம் இருந்தால் எத்தனை நலமாயிருக்கும்!

நினைவிற்கு:- “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” (சங். 48:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.