AppamAppam - Tamil

Nov 22 – விசுவாசமானது!

“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1).

நம்முடைய ஆண்டவர் ஒரு பெரிய விசுவாச வீரன். அவர் உலகங்களையெல்லாம் தம்முடைய விசுவாசத்தினாலே உருவாக்கினார். விசுவாசத்தோடு அவர் பேசின போது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்பட்டன. வேதம் சொல்லுகிறது, “விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்” (எபி. 11:3). தேவபிள்ளைகளே, நீங்களும் விசுவாச வீரர்களாயிருக்க வேண்டியது அவசியம்.

ஒரு முறை இரண்டு ஊழியர்கள் காலையிலிருந்து தெருப் பிரசங்கம் செய்து ஆத்துமாக்களைச் சந்தித்து பேசி மிகவும் களைப்படைந்து போனார்கள். பசி அவர்களுடைய வயிற்றைக் கிள்ளியது. அவர்கள் கர்த்தருடைய முகத்தை எதிர்பார்ப்போடு நோக்கிப் பார்த்தார்கள். கர்த்தர் அவர்களுடைய உள்ளத்திலே மெல்லிய குரலிலே, “வேலையாள் கூலிக்கு பாத்திரவானாய் இருக்கிறான். போரடிக்கிற மாட்டை வாயைக் கட்டாதிருப்பாயாக” என்று பேசினார்.

 அதைக் கேட்ட முதல் ஊழியர் மிகவும் உற்சாகமடைந்தார். உடனே ஹோட்டலுக்குப் போய் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். மற்றவரோ, காசு இல்லாமல் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு பிடிபட்டால் ஹோட்டல்காரன் மாவரைக்கப் போடுவானே என்று தயங்கினார். என்றாலும் இரண்டு பேரும் ஹோட்டலுக்குள்ளே நுழைந்து விட்டார்கள். ஒரு காசும் அவர்கள் கையில் இல்லை.

முதல் ஊழியர் விதவிதமான பலகாரங்களையும், சாப்பாடு வகைகளையும் வரவழைத்து சாப்பிட்டார். மற்றவரோ, பயந்து ஒரு ‘டீக்கு’ மாத்திரம் ஆர்டர் கொடுத்தார். இரண்டு பேரும் பணம் செலுத்துமிடம் அருகே வந்தபோது, அங்கே ஒரு சகோதரன் நின்றுகொண்டு அவர்களைப் பார்த்து: ‘நீங்கள் சாப்பாட்டுக்கு முன்பாக ஜெபிப்பதைப் பார்த்தேன். நீங்கள் கர்த்தருடைய ஊழிக்காரர்கள் என்று அறிகிறேன். ஆகவே உங்களுடைய சாப்பாட்டு பில்லை என்னிடத்தில் கொடுத்து விடுங்கள். நானே அதற்கு பணத்தைக் கட்டிவிடுகிறேன்’ என்று சொன்னார். பாருங்கள், பூரண விசுவாசம் திருப்தியாய் சாப்பிட்டது. அரை குறை விசுவாசமோ அரை கப் டீயைக் குடித்து விட்டு நிறுத்திவிட்டது.

“நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய். விசுவாசத்தினால் எல்லாம் கூடும்” என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுப்பாரென்றால் அதை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அந்த வாக்குத்தத்தத்தின் மேல் உங்களுடைய முழு விசுவாசத்தையும் வைப்பீர்களாக. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் கர்த்தருடைய வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போவதில்லை.

தேவபிள்ளைகளே, நீங்கள் விசுவாசிக்கும்போது, கர்த்தரை கனப்படுத்துகிறீர்கள், கர்த்தர் உண்மையுள்ளவர் என்று அறிக்கையிடுகிறீர்கள் என்று அர்த்தம். அவர் நிச்சயமாகவே உங்கள் விசுவாசத்தை கனப்படுத்தி ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபி. 11:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.