AppamAppam - Tamil

Nov 20 – மண் பாண்டங்களில் வல்லமை!

“இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரி. 4:7).

பரிசுத்த ஆவியின் வல்லமையைக் குறித்து அப். பவுல் எழுதும்போது அது ‘மகத்துவமுள்ள வல்லமை’ என்று குறிப்பிடுகிறார். அந்த மகத்துவமுள்ள வல்லமையை மண்பாண்டங்களாகிய நீங்கள் பெற்றிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்!

ஒரு முறை ஒரு பெரிய செல்வந்தர், தன்னுடைய பேர் புகழை நிலைநாட்டும்படி, மிகப்பெரிய விலையேறப் பெற்ற ஆர்கன் ஒன்றை தன் ஆலயத்திற்குப் பரிசளித்தார். அதை பிரதிஷ்டை செய்வதற்கு விசேஷித்த பிரதிஷ்டை ஆராதனை ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் பிரதிஷ்டையின் நேரத்திலே திடீரென்று மின்சாரம் நின்று போய்விட்டபடியினால் ஆலயம் முழுவதும் இருளடைந்தது. அந்த ஆர்கனையும் வாசிக்க முடியவில்லை. ஒருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பலரும் மின்சார பியூஸ் போய்விட்டதோ என்று பார்க்கும்படி ஓடினார்கள்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒரு முதியவர், “இந்த ஆர்கன் இயங்குவதற்கு மின்சார வல்லமை தேவை. மனுஷன் இயங்குவதற்கு பரலோகத்தின் வல்லமை தேவை” என்று சொன்னார். இந்த வார்த்தைகள் அந்த செல்வந்தனுடைய உள்ளத்தைத் தொட்டது. அவர் உள்ளம் உடைந்தவராய் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, நான் என்னுடைய சுய வல்லமையினால் இந்த ஆர்கனை வாங்கி பெருமையாய் ஆலயத்திற்கு நன்கொடையாய் கொடுத்தேன். ஆனால் உம்முடைய வல்லமையில்லாமல் அதை இயக்கச் செய்ய முடியாது என்பதை இப்போது அறிந்திருக்கிறேன். தேவனே உதவிச் செய்யும். இந்த பிரதிஷ்டை ஆராதனையை நடத்தித் தாரும். நான் என்னை தாழ்த்துகிறேன்” என்று ஒப்புக் கொடுத்தார்.

என்ன ஆச்சரியம்! அந்த உருக்கமான ஜெபத்தின் வல்லமையால் மின்சாரம் வந்தது. மின்சாரத்தின் வல்லமையினால் ஆர்கன் இயங்க ஆரம்பித்துவிட்டது. அந்த செல்வந்தர் ஜெபத்தின் வல்லமையை அப்பொழுதே உணர்ந்துகொண்டார். ஜெபத்தைத் தொடர்ந்து தேவ வல்லமையும், மின்சார வல்லமையும் வந்தன என்று மகிழ்ச்சியோடு சாட்சி கொடுத்தார். ஜெபிக்கிற மனிதன் வல்லமையுள்ள மனிதன். ஜெபிக்கிற ஆலயம் வல்லமையுள்ள ஆலயம். ஜெபிக்கிற குடும்பம் கர்த்தருக்காக அரியப்பெரிய காரியங்களை செய்து முடிக்கிற குடும்பம்.

அன்றைக்கு அப்போஸ்தலர்கள் எல்லோரும் மேல்வீட்டு அறையில் கூடி வந்து ஒருமனமாய், காத்திருந்து ஜெபித்தார்கள். ஜெபித்ததும் மின்சார வல்லமையைப் பார்க்கிலும் கோடி மடங்கான பரிசுத்த ஆவியானவரின் வல்லமை ஒவ்வொருவர்மேலும் இறங்கினது. வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுதையும் நிரப்பிற்று.

வேதம் சொல்லுகிறது, “அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்” (அப். 2:3,4).

தேவபிள்ளைகளே, இந்த பரிசுத்த ஆவியின் வல்லமை எப்பொழுதும் உங்களை நிரப்பிக்கொண்டேயிருக்கட்டும்.

நினைவிற்கு:- “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்… சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும் (ரோமர் 8:9,10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.