AppamAppam - Tamil

Sep – 17 – கொஞ்சத்தில் உண்மை!

“…கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்” (மத். 25:23).

கொஞ்சத்திலே உண்மையாய் இருப்பதும், கர்த்தரை சார்ந்திருந்தலும் நிறைவான ஆசீர்வாதங்களை தேவனிடமிருந்து கொண்டு வரும். நீங்கள் சிறிய காரியமானாலும்கூட கர்த்தருக்கு முற்றிலுமாக உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டியது அவசியம்.
ஒருமுறை “மைக்கேல் ஏஞ்சலோ” என்னும் புகழ்பெற்ற ஓவியர், சித்திரம் ஒன்றை வரைந்து கொண்டிருக்கிறதை ஒரு மனிதன் பார்த்துவிட்டு சென்றான். மறுபடியும் அவன் அங்கே வந்து பார்த்தபோது மைக்கேல் ஏஞ்சலோவின் அதே படத்தில் எந்தவிதமான வளர்ச்சியையோ, மாற்றத்தையோ பெற்று அடுத்த கட்டத்துக்குப் போனதாகத் தெரியவில்லை. அவன் அவரை நோக்கி: “ஏன் நீர் அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டேயிருக்கிறீர்? ஏன் தொடர்ந்து வரையும் பணியில் ஈடுபடவில்லை?” என்று கேட்டான்.
அதற்கு அந்த ஓவியக் கலைஞர், “நான் இரவும் பகலுமாக அதில் வேலை செய்து கொண்டிருக்கிறதை நீ காணவில்லையா? ஒரு நாள் முழுவதும் படத்தில் காணப்படும் மனிதனின் ஒரு விரலிலுள்ள நகத்தில் பணிபுரிகிறேன். சில சமயம் அவனது காதிலுள்ள மடலில் என்னுடைய முழு கவனத்தையும் திறமையையும் செலுத்தி உழைக்கிறேன். மற்ற சமயங்களில் முகத்தின் நெளிவுகள் தொடர்பாக காணப்படும் குறைபாட்டினை சில மணி நேரங்கள் செலவு செய்து சரி செய்கிறேன்” என்று சொன்னார்.
“இப்படிப்பட்ட மிகவும் அற்பமானவைகளுக்காக நீர் ஏன் இவ்வளவு நீண்ட நேரத்தை வீணாக்குகிறீர்?” என்று அந்த மனிதன் கேட்டான். “நான் நேரத்தை வீணாக்கவில்லை. இந்த சிறிய காரியங்களில்கூட அதிகமான கவனம் செலுத்தி, சீர் செய்யும்போதுதான் ஓவியம் பரிபூரணத்தை அடைகிறது” என்றார் அந்த ஓவியர்.
கிறிஸ்துவின் பரிபூரணத்தை அடைய நீங்கள் முன்னோக்கிச் செல்கிறீர்கள். சிறு சிறு காரியங்களிலெல்லாம்கூட நீங்கள் கவனமும் ஜாக்கிரதையுமுள்ளவர்களாய் இருந்தால்தான் உங்களுடைய பரிபூரணத்தை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும். கர்த்தர் உங்களுடைய வேலை ஸ்தலத்திலே உங்களை வைத்திருப்பதற்கு ஒரு நோக்கமுண்டு. ஆம், நீங்கள் கொஞ்சத்திலே உண்மையாயிருந்து கர்த்தர் தந்த தாலந்துகளை பயன்படுத்தி, கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வரவேண்டும்.
இயேசு சொன்ன உவமானத்தைப் பாருங்கள். ஒரு எஜமான் தன் வேலையாட்களில் ஒருவனுக்கு ஐந்து தாலந்துகளையும், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்துகளையும், இன்னொருவனுக்கு ஒரு தாலந்தையும் கொடுத்தான். அந்த எஜமான் தாலந்துகளைக் கொடுத்தது புதைத்து வைப்பதற்கு அல்ல. அவர்கள் உண்மையாயிருந்து, அந்த தாலந்துகளைக்கொண்டு அதிகமான தாலந்துகளை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் வரும்போது, நீங்கள் உங்களுடைய தாலந்துகளைக்குறித்து கணக்குக் கொடுக்க வேண்டுமே. நீங்கள் அவரை சந்திக்கும்போது வெறுங்கையாக அல்ல, நீங்கள் சம்பாதித்த ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களோடு அவரை எதிர்கொண்டு போகும்படி உங்கள் தாலந்துகளை உபயோகப்படுத்துங்கள். கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசியுங்கள்.

நினைவிற்கு :- “நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது” (ஆதி. 30:30).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.