No products in the cart.
மே 18 – ஆராதியுங்கள்!
“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுக் கொள்ளுங்கள்” (1 நாளா.16:29).
கர்த்தர் உங்கள்மேல் ஒரு விசேஷித்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” (ஏசா.43:21) என்பதே அந்த எதிர்பார்ப்பாகும்.
பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் கர்த்தர் உங்களை தமக்கென்று பரிசுத்த ஜனமாகத் தெரிந்துக் கொண்டார். நீங்கள் இந்த உலகத்திலும் அவரைத் துதிப்பீர்கள். நித்தியத்திலும் அவரைத் துதிப்பீர்கள். நீங்கள் தேவனுடைய ஆலயத்திலே முதலாவதாக, கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறீர்கள். உங்களை தேவ சமுகத்திலே தாழ்த்தி ஒப்புக்கொடுத்து அவரை ஆராதிக்கிறீர்கள். அவருடைய கிருபைகளையெல்லாம் எண்ணி அவரைப் போற்றுகிறீர்கள்.
கர்த்தர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எண்ணி அவரைத் துதிக்கிறீர்கள். “அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துக் கொள்” (சங். 45:11) என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் ஜீவிப்பது அவருடைய கிருபையல்லவா? உங்களுடைய ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு உயிர்த்துடிப்பும்கூட அவருடைய கிருபையல்லவா? (தானி. 5:23).
இரண்டாவதாக, கர்த்தருடைய ஆலயத்திற்கு நீங்கள் வரும்போது, மனம்திறந்து ஆண்டவரிடத்தில் பேசுகிறீர்கள். உங்களுடைய விசுவாசத்தை அறிக்கை செய்கிறீர்கள். கர்த்தரிடத்திலிருந்து நன்மையைப் பெற்றுக்கொள்ளுகிறீர்கள்.
ஒரு முறை கிறிஸ்து ஒரு பிறவிக் குருடனைக் கண்டு மனமிரங்கி, அவனுடைய கண்களில் சேற்றைப் பூசி சொஸ்தமாக்கினார். அவன் கண்கள் திறக்கப்பட்டபோது சந்தோஷமாய் திரும்பிப் போனான். பின்பு இயேசு இன்னொரு முறை அவனைச் சந்தித்தபோது அவனைப் பார்த்து, “நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கு அவன் ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துக் கொண்டான்” (யோவான் 9:35, 38).
நீங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு வரும்போது ஜெபிக்கிறது மட்டுமல்லாமல், உங்களுடைய விசுவாசத்தையும் அறிக்கை செய்ய வேண்டும். “ஆண்டவரே நான் உம்மை விசுவாசிக்கிறேன். நீர் உலகங்களையெல்லாம் சிருஷ்டித்தவர், கல்வாரி சிலுவையிலே எனக்காக ஜீவனைக் கொடுத்தவர், நீர் மீண்டும் இந்தப் பூமியில் வருவீர் என்று விசுவாசிக்கிறேன்” என்றெல்லாம் உங்களுடைய விசுவாசத்தை அறிக்கை செய்வீர்களாக.
மூன்றாவதாக, நீங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு வரும்போது அவரை ஸ்தோத்தரிக்கிறவர்களாக இருக்க வேண்டும். கர்த்தருடைய பாதங்களே உங்களுக்கு ஆறுதலின் பாத்திரங்களாக இருக்கட்டும். பிரச்சனைகள் வரும்போது கர்த்தருடைய ஆலயத்திற்கு போங்கள். கர்த்தரிடத்தில் உங்களது பாரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதங்களையும், ஆறுதலையும் கட்டளையிடுவார்.
நினைவிற்கு:- “ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருக்கிறது” (ஏசா.6:1).