AppamAppam - Tamil

மே 6 – ஆவியானவர் மூலம்!

“சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்… வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13).

உங்களை வழிநடத்த ஒருவர் இருக்கும்போது உங்கள் உள்ளத்தின் பாரங்கள் குறைந்துபோகும். வழி நடத்த வல்லமையுள்ளவரை நீங்கள் சார்ந்து கொள்ளுவீர்கள். இங்கே பரிசுத்த ஆவியானவர் உங்களை வழி நடத்துவதோடல்லாமல், வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிக்கவும் செய்வார் என்று சொல்லியிருப்பது இரட்டிப்பான சந்தோஷத்தையும் மனநிறைவையும் உங்களுக்குத் தருகிறது.

உங்கள் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் நீங்கள் குறுக்குச் சந்துகளில் நிற்கிறீர்கள். பல வகையான பாதைகளுக்குள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அந்தப் பாதைகளைப் பற்றி போதுமான அறிவு உங்களுக்கில்லை. உங்களுடைய ஞானமும் குறைவுபட்டது. ஆனால் ஆவியானவரோ சகலவற்றையும் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். சகலவற்றையும் சரியாய் நிதானிக்கிறவர். அவர் ஒருவரே உங்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்லக்கூடியவர். அவர் வழி நடத்தினால் நீங்கள் ஒருபோதும் திசை மாறிச் செல்லுவதில்லை. கர்த்தருடைய வழிகள் நித்தியமான ஆசீர்வாதத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும்.

பரிசுத்த ஆவியானவர் உங்களோடிருப்பதும், உங்களுக்குள் தங்கியிருப்பதும் எத்தனை மேன்மையானது! வழி நடத்தும் ஆவியானவர், பேசுகிற ஞானத்தையும்கூட உங்களுக்குத் தந்தருளுவார். வேதம் சொல்லுகிறது, “எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார்” (லூக். 12:11,12).

பேசவேண்டிய ஞானமுள்ள சரியான வார்த்தைகளை தக்க நேரத்தில் ஆவியானவர் உங்களுடைய நாவிலே தந்து சிறந்த கல்விமான்களைப் போல பேசும்படி செய்வார். அன்றைக்கு பேதுரு பேசின வார்த்தைகளைக் குறித்து எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். கல்வியறிவு இல்லாதவராய், மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுருவின் வார்த்தைகள் வேதத்தில் எவ்வளவு பிரதானமாய் இருக்கிறது என்பதைப் பாருங்கள்! அவர் எழுதிய நிருபங்களை அப்படியே ஆவியானவர் வேதத்துடன் இணைத்து வைத்திருக்கிறார் அல்லவா?

பவுலையும், சீலாவையும் ஊழிய பாதையில் ஆவியானவர் வெளிப்பாடுகளைக் கொடுத்து எத்தனை அருமையாய் வழிநடத்தினார் பாருங்கள். ஊழியத்தை ஆரம்பிக்க வழி நடத்தியவர் (அப். 13:2), ஊழியத்தின் மத்திய பகுதியிலும் (அப். 16:7). கடைசி வரையிலும்கூட (அப். 21:11) வழி நடத்தினாரே.

தேவபிள்ளைகளே, உங்கள் பாரத்தையெல்லாம் கர்த்தரின் மீது வைத்துவிட்டு அவரைப் பாடி துதித்து மகிழுங்கள். விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் அவர்தான். அவர் தெளிவான சத்தத்தோடும், தெளிவான திட்டங்களோடும் மெல்லிய குரலில் உங்களோடுகூட பேசுவார். உங்கள் வாழ்வின் நாயகன் உங்களை அருமையாய் வழிநடத்துவார்.

நினைவிற்கு:- “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும் போதும்; வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தைகளை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசா. 30:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.