AppamAppam - Tamil

மே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்!

“ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63).

அநேக குடும்பங்களில் மகிழ்ச்சி என்ற உயிர்த்துடிப்பு இல்லை. அநேக ஆலயங்களில் உயிர் இல்லை. ஒரு காலத்தில் கர்த்தருக்காக பிரகாசித்தவர்கள், இன்றைக்கு உயிரற்று அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறார்கள். ஏன் இந்த உயிரற்ற வாழ்வு? உயிர்ப்பிக்கிற ஆவியானவருக்கு இடம் கொடுக்காததே இதற்குக் காரணம்.

ஆவியானவருடைய குணாதிசயங்களில் முக்கியமானது உயிர்ப்பிக்கும் குணாதிசயமாகும். கர்த்தர் உலகத்தை சிருஷ்டித்தபோது, உயிரினங்களைப் படைப்பதற்கு முன்பாக தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் (ஆதி. 1:2). கர்த்தரால் ஏற்கெனவே உண்டுபண்ணப்பட்ட பூமி ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்தது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஆகையால் தேவ ஆவியானவர் உலகத்தில் உயிர் வகைகளை உருவாக்குவதற்காக ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். அதன் நிமித்தமாகவே உலகத்தில் சகல தாவரங்களும், மிருக ஜீவன்களும், பறவைகளும் உண்டாயிற்று.

மனிதனுடைய சிருஷ்டிப்பிலும் ஆவியானவருக்கு பங்கு இருந்தது. தேவனாகிய கர்த்தர் பூமியின் மண்ணினாலே மனிதனை உருவாக்கினார். அவன் தேவ சாயலிலும் அவருடைய ரூபத்திலும் சிருஷ்டிக்கப்பட்ட போதிலும், ஜீவன் அவனுக்குள் இல்லை. ஆகவேதான் கர்த்தர் ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அப்பொழுது மனிதன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7). யோபு சொல்லுகிறார்: “தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது” (யோபு 33:4).

உயிரற்ற நிலைமையில் இருக்கும் குடும்பங்களை, திருச்சபைகளை, தேசத்தை உயிர்ப்பிக்க என்ன வழி? ஆவியானவரின் கிரியை பலமாய் இருந்தால்தான் அவைகளெல்லாம் உயிர்ப்பிக்கப்பட முடியும். இதைக் கர்த்தர் தனது தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு காண்பிக்கும்படி சித்தமானார். எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே நிறுத்தினார். “மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்டார் (எசேக். 37:3). உயிரடையும்படியான வழியையும் கர்த்தர் சொல்லிக் கொடுத்தார். “நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள் மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்” (எசேக்.37:6) என்றார்.

ஆவியில்லாமல் இருந்தால் அதிலே எந்த மேன்மையுமில்லை. அது வெறும் உயிரற்ற உடல். ஆனால் கட்டளையிட்ட போதோ அந்த எலும்புகள் உயிரடைந்து பெரிய சேனையாக காலூன்றி நின்றார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆவியானவர் உங்கள்மேலும், குடும்பத்தாரின் மேலும், தேசத்தின் மேலும் பலமாய் இறங்கி செயலாற்ற இடம் கொடுப்பீர்களா?

நினைவிற்கு :- “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோமர் 8:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.