AppamAppam - Tamil

ஏப்ரல் 13 – முட்செடியும், திராட்சச் செடியும்!

“முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?” (மத். 7:16).

கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிப்பதற்கென்றே கர்த்தர் இந்த வார்த்தைகளைச் சொல்லியுள்ளார். செடி என்ன செடியோ அந்த செடிக்குரிய கனிகள்தான் அதில் காணப்பட முடியும். இயேசு சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:20).

நீங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, நல்ல திராட்சச் செடியாகிய அவரோடுகூட ஒட்டப்படுகிறீர்கள். பழையவைகள் ஒழிந்து போகின்றன. எல்லாம் புதிதாகின்றன. கிறிஸ்துவோடுகூட ஒட்டப்பட்ட நீங்கள், அவரோடுகூட நிலைத்திருக்க வேண்டும். அவரிலே இணைக்கப்பட்டு அவரோடுகூட இடைவிடாமல் உறவாடிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சுபாவத்தை மற்றவர்களுக்கு தெரிவிக்கிறவர்களாக இருப்பீர்கள். அப்படியிருந்தால் மட்டுமே உங்களிலே ஆவிக்குரிய கனிகள் காணப்படும்.

இயேசு சொன்னார்: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7:17-20). கனிகள் மரத்தை வெளிப்படுத்துகிறதுபோல நீங்கள் எப்போதும் கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும்.

இயேசுகிறிஸ்து தன் வாழ்நாளெல்லாம் பிதாவை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். வேதம் சொல்லுகிறது “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்தார்” (எபி. 1:3). பிதாவுக்கேற்ற கனிகளைக் கொடுத்ததினால்தான் இயேசு கிறிஸ்துவினால், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று திட்டமும் தெளிவுமாய் கூற முடிந்தது (யோவான் 14:9). தேவபிள்ளைகளே, உங்களைக் காண்பவர்கள் உங்களிலே, கிறிஸ்துவையே காண வேண்டும்.

ஒரு முறை, தேவ ஊழியர் ஒருவர் ஒரு வீட்டுக்கு சென்றபோது அங்கே கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. கணவனைக் குறித்து மனைவி போதகரிடத்திலே, கோபமாக, ‘ஐயா இவர் ஆலயத்திலே தேவதூதன் மாதிரி இருக்கிறார். வீட்டிலோ பிசாசு போல சண்டை போடுகிறார் என்ன செய்வது?’ என்றார்கள். கணவன் சொன்னார், ‘நானாவது ஆலயத்தில் தேவதூதனைப் போல இருக்கிறேன். என் மனைவியோ ஆலயத்திலும் பிசாசுபோல இருக்கிறாள். வீட்டிலும் பிசாசு போல இருக்கிறாள். இதைவிட நான் நரகத்தில் வாழ்வது மேல்’ என்றார்.

“உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்” (யாக். 3:13) என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும், செயலும் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவையாகவே இருக்கட்டும். தவறியும் சாத்தானுக்கு இடங்கொடாதீர்கள்.

நினைவிற்கு:- “விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்” (சகரி. 8:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.