AppamAppam - Tamil

ஏப்ரல் 06 – சிலுவையின் உபதேசம்!

“சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ தேவபெலனாயிருக்கிறது” (1 கொரி. 1:18).

உலகத்தில் பல வகையான உபதேசங்கள் இருப்பினும், இயேசுகிறிஸ்துவின் உபதேசம் மட்டுமே, இரட்சிப்பின் உபதேசமாயிருக்கிறது. அது நமக்கு தேவ பெலனைத் தருகிறது. சரி, சிலுவையின் உபதேசத்தைப் பற்றி இங்கு தியானிப்போம்.

  1. அது அன்பின் உபதேசம்:- வேதத்தின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரையிலும் தேவனுடைய அன்பு வெளிப்பட்ட போதிலும், சிலுவைப் பாடுகள் பற்றிய பகுதிகளில் தேவ அன்பு வெள்ளம்போல பிரவாகித்து வருகிறது. அவருடைய பாடுகளும், வேதனைகளும் மகனே, மகளே, உன்னை நான் நேசிக்கிறேன் என்பதையே குறிக்கின்றன.

உலகம் அன்புக்காக ஏங்குகிறது. அந்த அன்பு கிடைக்காமல் போகும்போது உள்ளம் சோர்ந்துபோகிறது. ஆனால், இயேசுகிறிஸ்து சிலுவையிலே தம்முடைய ஜீவனைக் கொடுத்ததின் மூலமாக அவர் நம்மை முழு இருதயத்தோடும் நேசிக்கிறதை வெளிப்படுத்தினார். “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவா. 15:13) என்று தாம் சொன்னபடியே ஜீவனைக் கொடுத்து அன்புக்கு இலக்கணம் வகுத்தார்.

  1. மன்னிப்பின் உபதேசம்:- சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்த இயேசு முழு மனுக்குலத்திற்காகவும் தம்முடைய இரத்தத்தையெல்லாம் ஊற்றிக் கொடுத்தார். வேதம் சொல்லுகிறது, “அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (எபே. 1:7, கொலோ. 1:14).
  2. தெய்வீக சுகத்தின் உபதேசம்:- சிலுவைப் பாடுகளில் இயேசு ஏற்றுக் கொண்ட தழும்புகள், உங்களுக்கு தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் வாக்குப்பண்ணுகின்றன. வேதம் சொல்லுகிறது, “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24). “தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா. 53:5).

ஆப்பிரிக்காவில் ஜார்ஜ் ஜில்லக் என்ற மிஷனரி, தெய்வீக சுகத்தைப் பற்றி பிரசங்கித்து வந்தபோது, கொடிய ‘கருப்பு பிளேக்’ என்ற நோய் பரவி, ஜனங்கள் ஆயிரக்கணக்கில் மரிக்க ஆரம்பித்தார்கள். வியாதிப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தினால் அந்த தொற்றுநோய் மிக வேகமாய் பரவியது.

ஆனால் அவரோ, வாந்தியினால் வெளிவந்த விஷக் கிருமிகளுடன்கூடிய இரத்தத்தை, தன்னுடைய கைகளிலே ஊற்றிக் கொண்டார். அந்த கிருமிகள் அவர் கையில் பட்டதும் செத்து மடிகிறதை மைக்ரோஸ்கோப்பில் பார்த்தார். காரணம், அவர் தன்னை சிலுவையோடு இணைத்து இருந்ததாலேயே அவரால் இதைச் செய்ய முடிந்தது. தேவபிள்ளைகளே, உங்களுடைய நோயும், வியாதியும் எதுவாயிருந்தாலும், உங்களுக்காக தழும்பை ஏற்றுக்கொண்ட இயேசுகிறிஸ்துவின் கரம் உங்கள்மேல் படும்போது, எல்லா விஷக்கிருமிகளும் செத்து மடியும். நோய் நீங்கிப்போகும்.

நினைவிற்கு:- “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்” (எபி. 2:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.