AppamAppam - Tamil

Dec 2 – வழிகாட்டுவேன்!

“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்னை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).

“உனக்கு வழிகாட்டுவேன்” என்று கர்த்தர் திரும்பத் திரும்ப வாக்குப் பண்ணியிருக்கிறார். கர்த்தர் உங்களை எப்படி வழி நடத்துகிறார்? முதலாவது, தம்முடைய வசனத்தின் மூலமாய் உங்களுக்குப் போதித்து வழி நடத்துகிறார். அவருடைய வசனங்கள் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங். 119:105). கர்த்தருடைய வசனத்தின் மேல் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அதன்மேல் தியானமாய் இருக்கிறவர்கள் தங்கள் வாழ்க்கையிலே கர்த்தருடைய சித்தம் இன்னதென்று தெளிவாய் அறிந்து கொள்ளுகிறார்கள்.

இது வேதாகமத்தைத் திறந்து கண்கள் மூடியபடி ஒரு வசனத்தில் விரல் வைத்துப் பார்ப்பதல்ல. ஒவ்வொருநாளும் ஆகாரம் புசிப்பதைப்போல, பசி தாகத்தோடும், வாஞ்சையோடும் திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் ஆர்வமாய் இருப்பதாகும்.

ஜார்ஜ் முல்லர் தேவ வழி நடத்துதலுக்காக, வேத வசனத்திற்காகவே எல்லா சூழ்நிலைகளிலும் காத்திருந்தார். பத்தாயிரம் அனாதை குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய அந்த பெரிய தகப்பன், மனுஷரிடம் உதவியைத் தேடாமல் முழங்காலிலே நின்றவாறு வேதத்தில் கர்த்தருடைய ஆலோசனையைத் தேடினார். கர்த்தரும் அவருடைய வாழ்க்கை முழுவதும் அருமையாய் வழிநடத்தினார். அவருக்கோ அல்லது அனாதை குழந்தைகளுக்கோ ஒன்றும் குறைவாய் இருந்ததில்லை.

  இரண்டாவதாக, உங்களை பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வழி நடத்துகிறார். வேதம் சொல்லுகிறது, “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:13). இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவியம் முழுவதுமே ஆவியிலே வழிநடத்தப்பட்ட ஜீவியமாயிருந்தது. ஆவியினால் பிறந்து வளர்ந்த அவர், ஆவியினால் வனாந்தரம் சென்றார், ஆவியின் பெலத்தினால் கலிலேயாவிற்கு திரும்பினார், ஆவியினால் சகித்து, உயிர்த்தெழுந்து மகிமைக்குள் உட்பிரவேசித்தார். தன் உலக ஜீவியத்தில் தன்னை வழி நடத்தின அதே ஆவியானவரை அவர் சீஷர்களுக்கு அருளிச் செய்தார்.

அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்திலே சீஷர்களையும், அப்போஸ்தலர்களையும் கர்த்தருடைய ஆவியானவர் எவ்வளவு அழகா வழிநடத்தினார் என்பதை அறிந்துகொள்ளலாம். சத்திய ஆவியானவர் இரதத்துடனே சேர்ந்துகொள்ளும்படி பிலிப்புவை ஏவி நடத்தினார் (அப். 8:29). கொர்நேலியு அனுப்பின மனுஷரோடே போகும்படி பேதுருவை வழிநடத்தினார் (அப். 10:20).  பிலிப்புவை ஊழியத்திற்கென பட்டணத்திற்கு செல்லும்படி வழி நடத்தி அங்கே சபையை ஸ்தாபித்தார்.

கர்த்தர் உங்களை வழி நடத்துகிறார். தேவதூதர்களை அனுப்பி தம் ஆலோசனைகளைத் தருகிறார். இயற்கையின் மூலமாகவும், சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாகவும் உங்களோடு பேசுகிறார். தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாள் காலையிலும் கர்த்தருடைய ஆலோசனைக்காகக் காத்திருங்கள்.

நினைவிற்கு:- “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” (சங். 48:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.