AppamAppam - Tamil

Nov 11 – மங்கியெரிகிற திரி!

“அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்” (ஏசாயா 42:3).

நம் தேவன் மங்கியெரிகிற திரியை அணைய விடாதவர். அவர் அணைய விடாதவர் மாத்திரமல்ல, பிரகாசிக்கச் செய்கிற தேவனாகவுமிருக்கிறார். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பாருங்கள். முன்பு ஒரு காலத்தில் நீங்கள் கர்த்தருக்காக பிரகாசமாய் இருந்திருக்கக்கூடும். எரிந்து பிரகாசிக்கக் கூடிய விளக்காய் இருந்திருக்கக்கூடும். ஆதி அன்பிலே வல்லமையாய் செயல்பட்டிருக்கக்கூடும்.

ஆனால் இப்பொழுதோ, பலவிதமான சோதனைகளினால் உங்கள் உற்சாகத்தை இழந்து, ஜெப ஜீவியத்தை இழந்து மங்கியெரிந்துக் கொண்டிருக்கக்கூடும். கர்த்தர் இன்றைக்கு உங்களை அனல் மூட்டி எழுப்ப சித்தமுள்ளவராய், “மங்கியெரிகிற திரியை நான் அணைப்பதில்லை” என்று சொல்லி வாக்குக் கொடுக்கிறார்.

விளக்கிலே ஏன் திரி மங்கியெரிகிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அதற்கு பல காரணங்களுண்டு. முதலாவது காரணம், அதிலே போதுமான எண்ணெய் இல்லாமல் இருப்பதுதான். பரிசுத்த ஆவியானவரின் நிறைவு அனுதின வாழ்க்கையில் உங்களுக்கு இல்லாமல் போனால் ஆவிக்குரிய உள்ளான விளக்கு மங்கியெரிய ஆரம்பிக்கும். இன்னும் சில விளக்குகளில் திரி நீளம் குறைவாக இருந்து எண்ணெயில் மூழ்காமல் போனால் மங்கியெரிய ஆரம்பிக்கும்.

உங்களுடைய வாழ்க்கையில் உள்ளத்தின் ஆழத்தில் ஆண்டவரோடு ஆழமான ஜெப தொடர்பு கொள்ளாமல் போனால், பரிசுத்த ஜீவியம் மங்கியெரிய ஆரம்பித்துவிடும். பரிசுத்தமும், ஜெப ஜீவியமும் மங்குவதைப்போல வேதனையான காரியம் வேறு ஒன்றுமில்லை. இதனால் அநேக ஆவிக்குரிய உன்னதத்தின் ஆசீர்வாதங்களை நீங்கள் இழந்து போக வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.

இஸ்ரவேல் ஜனங்களின் பரிசுத்தம் மங்கிப்போனபோது, எரேமியா தீர்க்கதரிசியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே” (புலம் 4:1, 2) என்று அவர் புலம்பி அழுது ஜெபித்தார்.

பரிசுத்த ஜீவியம் மங்கிப் போவதினால், தரிசனக் கண்களின் தூர பார்வையும் மங்கிப் போகிறது. பிரகாசமற்ற மனக்கண்கள் சோர்வை வெளிப்படுத்துகிறது. தாவீது ராஜா சொல்லுகிறார்: “துயரத்தினால் என் கண்கள் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று” (சங். 6:7).

தேவபிள்ளைகளே, இந்த நாள் கர்த்தர் உங்களுக்கு ஒரு நற்செய்தியை வாக்குத்தத்தத்தோடுகூட அறிவிக்கிறார். மங்கியெரிகிற உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்க செய்ய வல்லமையுள்ளவர் உங்களோடுகூட இருக்கிறார். உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்க செய்கிறவர், மங்கியுள்ள உங்கள் வாழ்க்கையையும் பிரகாசிக்கச் செய்வார். உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தை அனல் மூட்டி எழுப்புவீர்களாக. நீங்கள் இழந்து போன எல்லா கிருபைகளையும் கர்த்தர் உங்களுக்கு மீண்டும் தருவார்.

நினைவிற்கு:- “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்” (எண். 6:25).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.