AppamAppam - Tamil

Oct – 25 – பொல்லாத ஆவிகளோடு போராட்டம்!

 “…வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபே. 6:12).

ஒரு மனுஷனுக்கு உள்ளேயிருந்து வருகிற போராட்டமுமுண்டு. வெளியேயிருந்து வருகிற போராட்டமுமுண்டு. அவனுடைய சரீரத்திலிருந்து போராடுகிற இச்சைகளுமுண்டு. வெளியேயிருந்து போராடுகிற சத்துருவினுடைய வல்லமையுமுண்டு.

வானத்திலிருந்து தள்ளப்பட்ட சாத்தானும், அவனுடைய சேனையும் கர்த்தருக்கும், தேவ பிள்ளைகளுக்கும் விரோதமாக அதிகமாய் போராடுகின்றன. மனதை சோர்புறப்பண்ணி கிறிஸ்தவ ஓட்டத்தை தடுத்து நிறுத்தும்படியாக வான மண்டலத்தின் பொல்லாத ஆவிகள் போராடுகின்றன.

அதே நேரத்தில் அந்த போராட்டத்தில், உங்களுக்கு உதவி செய்வதற்காக கர்த்தருடைய இரத்தமுண்டு. பரிசுத்தவான்களின் ஐக்கியமுண்டு. கர்த்தருடைய நாமம் உங்களுடைய கைகளிலுண்டு. வேத வசனங்களுண்டு. மட்டுமல்ல, ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்கள் உங்கள் பக்கத்திலிருக்கிறார்கள். போராட்டத்தில் உங்களுக்கு உதவி செய்வதற்காக மிகாவேல் தேவதூதனே உங்களுக்காக நிற்கிறான். வேதம் சொல்லுகிறது, “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்” (தானி. 12:1).

இந்த நாட்களில் சாத்தான் தனக்கு கொஞ்சக்காலம் மாத்திரமே உண்டு என்று அறிந்து யாரை விழுங்கலாமோ என்று கெர்ச்சிக்கிற சிங்கம் போல வகைதேடித் திரிகிறான். கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமான இயக்கங்கள் இன்று வலுவடைந்து வருகின்றன. மத சுதந்தரம் கொஞ்ச கொஞ்சமாக நம் தேசத்தில் பறிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒரு போராட்டமான காலத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்.

நீங்கள் கர்த்தரிடத்திலே, “ஆண்டவரே உம்முடைய ஆயிரம் தூதர்களை எங்களுக்கு தந்தருளும். உங்களைக் காக்கும்படி உங்களுக்காக தூதர்களுக்கு கட்டளையிடுவேன் என்று சொன்னீரே. எங்களையும், எங்களுடைய ஊழியங்களையும், எங்களுடைய ஊழியங்களில் இருக்கிற பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளையும் காப்பதற்காக உம்முடைய தூதர்களை அனுப்பும்” என்று கேளுங்கள். ஆம், வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் உங்களுக்கு எதிராக புறப்படும்போது கர்த்தருடைய பிரதான தூதனாகிய மிகாவேலும் அவனைச் சேர்ந்த கோடிக்கணக்கான தூதர்களும் உங்களுடைய பட்சத்திலே நின்று உங்களுக்காக யுத்தம் செய்வார்கள்.

வேதத்திலே, எசேக்கியாவுக்கு ஒரு போராட்டம் வந்தது. சனகெரிப் கடற்கரை மணலத்தனையான சேனையை இஸ்ரவேலருக்கு விரோதமாகக் கொண்டு வந்து குவித்தான். யாராலும் எதிர்நின்று ஜெயிக்கக்கூடாத அளவு அவனுடைய சேனை அத்தனை திரளாய் இருந்தது. அந்த போராட்டத்தில் எசேக்கியா செய்ததெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் போய் ஊக்கமாக ஜெபித்ததுதான். கர்த்தரை ‘சேனைகளின் கர்த்தாவே’ என்று அழைத்தார். கர்த்தர் செய்தது என்ன? உடனே தன்னுடைய தூதனை அனுப்பினார். வேதம் சொல்லுகிறது, “அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்” (ஏசாயா 37:36).

நினைவிற்கு:- “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” (சங். 34:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.