No products in the cart.
Oct – 16 – ஆத்துமாவையும் சரீரத்தையும்!
“ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத். 10:28).
தேவனுக்குப் பயப்படுங்கள். ஏனென்றால் உங்களுடைய ஜீவியம் மட்டுமல்ல, உங்களுடைய நித்தியமும் அவருடைய கைகளில்தான் இருக்கிறது. ஆகவே தான் இயேசு சொன்னார்: “ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” (மத். 10:28). ஒரு முறை அந்த நரகத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அந்த நரக தண்டனை எவ்வளவு கொடிதாய் இருக்கும் என்று சிந்தியுங்கள். தேவனை விட்டு தூரமாய் விலகிப் போனால், நரக தண்டனையை எத்தனை யுகயுகமாய் அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவனுக்குப் பயப்படுங்கள்.
ஸ்காட்லாந்து தேசத்தில் பெரிய பீங்கான் தொழிற்கூடம் ஒன்று இருந்தது. மூலப்பொருட்களை உருக்கி பாத்திரங்களாக மாற்றும் அந்த தொழிற்சாலையை ஒரு ஊழியர் பார்வையிட வந்தார். அங்கே கண்ணாடிப் பீங்கான் உருக்கப்பட்டு உலைக்களத்திலிருந்து வெளியே வருவதைப் பார்த்தார். உலைக்களத்தின் அகோர வெப்பமும், செந்நிறமான அக்கினிப் பிழம்பும் அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் மெய்மறந்து, “ஆ, இந்த உலைக்களமே இவ்வளவு பயங்கரமான அகோர அக்கினியாய் இருக்குமென்றால், நரகம் எத்தனை கொடிய வேதனையுடைதாய் இருக்கும்” என்று சத்தமிட்டு சொன்னார்.
இந்த வார்த்தைகள் அந்த ஊழியரின் அருகிலே நின்று கொண்டிருந்த ஒரு தொழிலாளியின் காதிலே விழுந்தன. அவன் சிந்திக்கலானான். பல மாதங்கள் கழித்து அவன் அந்த தேவ ஊழியரை சந்திக்க வந்தான். “ஐயா, நீங்கள் தற்செயலாய் உலைக்களத்துக்கு வந்தீர்கள். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விட்டீர்கள். ஆனால், அது என்னை சிந்திக்க வைத்தது. அந்த நரகத்துக்கு தப்பும்படி நான் என்ன செய்யவேண்டும்? இந்த அக்கினியையே சந்திக்கத் திராணியில்லாத நான் எப்படி நரகத்தின் அக்கினியை சந்திக்க முடியும்? நரகத்திலிருந்து தப்பும் வழியைச் சொல்லிக் கொடுங்கள்” என்று கதறி அழுதான். அந்த நாள் அவனுடைய இரட்சிப்பின் நாளாய் அமைந்தது.
அநேகர் எரிநரகத்தைக் குறித்து சிந்திக்கவோ, தியானிக்கவோ விரும்புகிறதில்லை. பரலோகராஜ்யம் இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே நரகம் இருக்கிறதும் உண்மை அல்லவா? அநேகர் அன்புள்ள தேவன் ஒரு மனுஷனை நரகத்தில் தள்ளுவாரா என்று வாதாடுகிறார்கள். அவர் தள்ளவேண்டிய அவசியமே இல்லை. பாவம் செய்கிற மனுஷனால் பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாமல், அவனாகவே அந்த அன்புள்ள தேவனை விட்டு விலகி ஓடி பாதாளத்தில் விழுகிறான். கர்த்தரைத் தெரிந்துகொள்ளாமல் சாத்தானையும், அவன் தரும் உலக இச்சைகளையும் தெரிந்து கொள்ளுகிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தீமையான முடிவை தேடிக் கொள்ளுகிறார்கள்.
தேவபிள்ளைகளே, நீங்களும், உங்கள் வீட்டாரும் கிறிஸ்துவின் மகிமையான ராஜ்யத்திலே காணப்பட பூரணமாய் அர்ப்பணித்து விடுங்கள். உங்கள் குடும்பத்தாரைக் குறித்த பாரம் உங்களுக்கு இருக்கட்டும். நீங்கள் மாத்திரம் பரலோகராஜ்யத்துக்குச் சென்று, உங்கள் பிள்ளைகள் அல்லது பெற்றோர் அல்லது இனத்தவர்கள் நரகக்கடலிலே நித்திய நித்தியமாய் தவிக்கக்கூடாதல்லவா? சிந்தித்துப்பாருங்கள். நினைவிற்கு:- “…கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31).