AppamAppam - Tamil

Oct – 15 – ஜலத்திலிருந்து!

“இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே…” (மத். 3:16).

நீங்கள் பின்பற்றுவதற்கான முன்மாதிரியை வைத்துச் சென்றவர் இயேசுகிறிஸ்து. அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். கர்த்தருடைய கட்டளைகள் சிறிதானாலும், பெரிதானாலும் அவைகளை நிறைவேற்றுவது தேவனுடைய பிள்ளையாகிய உங்களுக்குக் கிடைக்கிற பாக்கியம் அல்லவா? இயேசுகிறிஸ்து தாமே ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றார். மாத்திரமல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கிறவராகவும் இருந்தார்.

வேதத்தை சற்று ஆராய்ந்து பாருங்கள். நோவாவின் காலத்தில் பெரும் மழை பெய்தது. உலகம் முழுவதிலும் ஜலப்பிரளயம் வந்தது. இந்தப் பெரும் மழை வெள்ளத்தினால் பூமியானது மூழ்கி கழுவப்பட்டு ஞானஸ்நானம் பெற்றது. அப்பொழுது பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்களுடைய பழைய எகிப்தின் அடிமைத்தன வாழ்க்கை முடிந்தது. சுயாதீன வாழ்க்கை ஆரம்பமானது.

இயேசுகிறிஸ்து சிலுவையிலே சிந்திய இரத்தத்தினால் பூமி தூய்மையானது. இந்த இரத்தத்தை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் புதிய சிருஷ்டிகளாய் மாறுகிறார்கள். பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் எல்லாரும் மேல் வீட்டறையில் உபவாசித்து ஜெபித்தபோது, பரிசுத்த ஆவியின் அக்கினி பூமியில் ஊற்றப்பட்டது. பரிசுத்த ஆவியின் அக்கினியினால் உலகம் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள தன்னை ஒப்புக்கொடுத்தது.

ஜலத்தினால், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும். வேதம் சொல்லுகிறது: “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது” (1 யோவான் 5:8).

கர்த்தர் இயற்கையிலேகூட அதை வைத்திருக்கிறார். புது சிருஷ்டியாய் ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். தாயின் கருப்பையின் மெல்லிய திரையானது கிழிக்கப்பட்டு தண்ணீரானது வெளியே வருகிறது. தொடர்ந்து இரத்தமும், அதைத் தொடர்ந்து சுவாசமும், ஆவியும், ஜீவனுள்ள குழந்தையும் வெளிவருகிறது. பாருங்கள், தண்ணீர், இரத்தம், ஆவி. அங்கேயும் மூன்றும் ஒருமனப்பட்டிருக்கிறது.

இயேசுவை சிலுவையில் அறைந்தபோது, போர்ச்சேவகன் அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தினான். அங்கேயிருந்து தண்ணீரும், இரத்தமும் புறப்பட்டன. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் ஊற்றப்பட்டது. இதனால் சபையாகிய குழந்தை பிறந்தது. பழைய நியாயப்பிரமாண வாழ்க்கை முடிந்து புதிய ஏற்பாட்டின் சபையாகிய குழந்தை வெளிவந்தது.

தேவபிள்ளைகளே, நீங்கள் இந்த தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாக, இயேசுவின் இரத்தத்தின் மூலமாக, பரிசுத்த ஆவியின் மூலமாக புதிய சிருஷ்டியாய் கர்த்தருடைய குடும்பத்திற்குள்ளாய் வருகிறீர்கள் என்பதை மறந்து போகாதேயுங்கள்.

நினைவிற்கு:- “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” (கலா. 3:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.