AppamAppam - Tamil

Oct 02 – என்னுடையவர்கள்!

“…உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்” (ஆதி. 48:5).

யாக்கோபு முதிர்வயதானபோது, யோசேப்பின் மூலமாய்ப் பிறந்த தன் பேரப்பிள்ளைகளையெல்லாம் தன்னுடைய அருகிலே வரவழைத்து ஆசீர்வதிக்கலானார். அந்த பேரப்பிள்ளைகள் அடிமைத்தன தேசமான எகிப்திலே பிறந்தவர்கள். இஸ்ரவேல் தேசமோ, தேவன் ஆபிரகாமுக்கும், அவனுடைய சந்ததிக்கும் என்றென்றைக்கும் சுதந்தரமாக இருக்கும்படி கொடுத்த தேசம்.

யாக்கோபு அவர்களை ஆசீர்வதிப்பதற்கு முன்பாக, எகிப்தில் பிறந்த அந்த பேரப்பிள்ளைகளை, இஸ்ரவேல் தேசத்தில் பிறந்த தன்னுடைய பிள்ளைகளுக்கு சமமாக, புத்திரசுவிகாரம் எடுத்துக்கொண்டார். தன்னுடைய பிள்ளைகளுக்கு என்ன சுதந்திரம் உண்டோ, அந்த சுதந்தரத்தை தன் பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பினார். அதுமுதல், அவர்கள் யாக்கோபின் சொந்தப்பிள்ளைகள் என்று அழைக்கப்படும்படியாயிற்று.

 நீங்களும்கூட எகிப்திலே, பேரப்பிள்ளைகளைப்போல அடிமைத்தனத்தில் வாழ்கிறவர்களாகவே கர்த்தருக்கு முன்பாக காணப்பட்டீர்கள். அப். பவுல் எழுதுகிறார், “…நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபே.2:2-5).

 இந்த தேவனுடைய திட்டத்திற்கு “புத்திர சுவிகாரத்திட்டம்” என்று பெயர். யாக்கோபு சொல்லுகிறதை மீண்டும் கவனியுங்கள். ‘அந்த பேரப்பிள்ளைகள் எகிப்திலே பிறந்தவர்களாய் இருந்தபோதிலும் இனி அவர்கள் என்னுடையவர்கள். அவர்கள் எனக்கு பேரப்பிள்ளைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இனி என்னுடைய சொந்தப்பிள்ளைகளாய் இருப்பார்கள். பேரப்பிள்ளைகள் என்ற ஸ்தானத்திலிருந்து அவர்களைத் தத்தெடுத்து, என்னுடைய சொந்தப் பிள்ளைகள் என்ற நிலைமைக்கு கொண்டு வருகிறேன்’.

இதனுடைய அர்த்தம் என்ன? பேரப்பிள்ளைகளாகிய எப்பிராயீமும், மனாசேயும் இனி யாக்கோபை பார்க்கும்போது, “அப்பா” என்றே அழைக்கவேண்டும். ஆம், இதைத்தான் இயேசுகிறிஸ்துவும் உங்களுக்கு வைத்திருக்கிறார். அவரை “அப்பா, பிதாவே” என்ற புத்திரசுவிகார ஆவியோடு அழைக்கக்கூடிய பிள்ளைகளே தேவை. எகிப்தின் அடிமைத்தனத்தில் இருக்கிறவர்கள் என்ற பெயர் தேவையில்லை. கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரர் என்கிற பெயரே தேவை.

தேவபிள்ளைகளே, நீங்களும் அவர் குடும்பத்தில் இணைக்கப்பட்டு, அவரை ‘அப்பா, பிதாவே’ என்று அழைக்கும்படியாக உயர்த்தப்பட்டிருப்பது பெரிய ஆசீர்வாதம் அல்லவா?

நினைவிற்கு:- “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்”(ரோமர் 8:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.