Appam, Appam - Tamil

மார்ச் 07 – பெறப்போகும் ஜெயம்!

“என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்” (1 சாமு. 17:37).

ஏற்கனவே தாவீது பெற்ற வெற்றி எது? சிங்கத்தையும், கரடியையும் கொன்றதே அந்த வெற்றி. இப்பொழுது, தாவீது பெறப்போகிற வெற்றி எது? ஆம், அது ராட்சதனாகிய பெலிஸ்தனை மேற்கொள்ளும் வெற்றியாகும். உங்களை எதிர்ப்பவன் கோலியாத் என்ற பெயருடையவனாக இருக்கலாம். ராட்சதப் பிறவியாக இருக்கலாம். ஒன்பதடி உயரமுள்ளவனாய் இருக்கலாம். பெரிய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்திருக்கலாம். ஆனால், கர்த்தர் உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பார்.

கடந்தகால வெற்றியிலே மனம் மகிழ்ந்து அதிலேயே தங்கிவிடாதிருங்கள். எதிர்கால வெற்றியை விசுவாச அறிக்கை செய்து, தைரியத்தோடு முன்னேறுங்கள். “தேவன் ஒருபோதும் தோல்வியடைந்தவரல்ல. அவருடைய நாமத்திலே வருகிற நான் ஒருபோதும் தோல்வியடையப் போகிறதுமில்லை” என்று சொல்லுங்கள். “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங். 23:5) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

வேதத்தில் ஏன் அவ்வளவு அற்புதங்களைப்பற்றி எழுதி வைக்கப்பட்டிருக்கிறது? தேவ பிள்ளைகளும், நியாயாதிபதிகளும், ராஜாக்களும் பெற்ற வெற்றியை, நீங்கள் வாசிக்க வாசிக்க, நீங்கள் பெறப்போகிற வெற்றிக்கு அது உங்களை ஆயத்தமாக்கிவிடும். இஸ்ரவேலருக்கு சிவந்த சமுத்திரம் வழிவிட்டதுபோல, உங்களுக்கும் கர்த்தர் ஒரு வழியைத் திறந்தருளுவார். அவர் திறந்த வாசலை உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார். வனாந்தரத்திலே இஸ்ரவேலரை நிறைவாய்ப் போஷித்தவர் உங்களையும் போஷிப்பார். கன்மலையிலிருந்து ஆறுகளை புறப்படப் பண்ணினவர், உங்கள்மேலும் ஆசீர்வாதமான ஆறுகளை ஊற்றியருளுவார். ஆகவே, பெறப்போகிற வெற்றிகளை வாய்விட்டு சொல்லுங்கள்.

இந்த உலகம் தோல்வியான ஒரு உலகம். ஜனங்கள் தோல்வியைப்பற்றியே எண்ணியவர்களாய் அதையே சிந்தித்து, அதையே பேசுகிறார்கள். நாம் ஜெயகிறிஸ்துவுக்கு உரியவர்கள். ஜெயங்கொண்ட பரிசுத்தவான்களால் நிரம்பியிருக்கிற பரலோகத்திற்குரியவர்கள். ஆகவே, வெற்றிக்கான திட்டங்களை இப்பொழுதே வகுத்துவிடுங்கள். அன்றைக்கு இராஜாவாய் இருந்த சவுலும், அவனுடைய படைத்தலைவனாகிய அப்னேரும், மற்ற வீரர்களும் தோல்வியைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட தோல்வியின் எண்ணம் வந்ததினாலே, அவர்கள் கோலியாத்தைக்கண்டு பயந்து நடுங்கினார்கள். ஆனால் தாவீதோ, தான் பெறப்போகும் வெற்றியை எண்ணி மேன்மை பாராட்டினார்.

“இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” (1 சாமு. 17:46).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கப்போகிற வெற்றியை வாய்திறந்து அறிக்கையிட முற்படுங்கள்.

நினைவிற்கு:- “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவா. 4:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.