AppamAppam - Tamil

ஆகஸ்ட் 08 – விழிப்பாயிருங்கள்!

“திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்” (மத். 24:43).

திருடன் என்று ஒருவன் இருக்கிறவரையிலும், நீங்கள் விழிப்பாயிருப்பது அவசியம். யாரை விழுங்கலாமோ என்று சத்துரு வகைத்தேடி திரிவதினால், நீங்கள் கண்டிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.

உங்களுடைய பரிசுத்த வாழ்க்கையைக் காத்துக் கொள்வதில் அதிக விழிப்புள்ளவர்களாய் இருங்கள். உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் கறைதிரைகளை ஏற்படுத்த சாத்தான் முயற்சி செய்துகொண்டேயிருக்கிறான். சாட்சியின் ஜீவியம் ஒரு தடவை கெட்டுப்போனால், பிறகு அதை சீர்ப்படுத்துவது என்பது முடியாத காரியம். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:15) என்று வேதம் சொல்லுகிறது.

ஒரு போதகர் எழுப்பிய ஒரு ஆவிக்குரிய சபை வளர்ந்து வந்தது. அந்த சபை குறுகிய காலத்தில் மிகவும் வளர்ந்து பேரும் புகழும் பெற்றதாக விளங்கியது. ஆனால் அந்த போதகரால் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள முடியவில்லை. முடிவில் அவரை போதகராய் இருக்க விடாதபடி தள்ளிவிட்டார்கள். அத்தனை பெரிய ஆலயத்தை ஆரம்பித்து, வளரச் செய்து, விருத்தியடையும்படி பல ஆண்டுகள் பாடுபட்டவரால், அந்த ஆலயத்தில் பிரசங்கிக்க முடியாமல் போய்விட்டது. அவருடைய நிலைமை பரிதாபமாய் முடிந்தது.

நீங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் விழிப்பாய் இருக்க வேண்டியது அவசியம். வேதம் சொல்லுகிறது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” (1 பேதுரு 5:8). தந்திரமாக வலையைப் பின்னி உங்களைக் குழியில் விழச்செய்வதே சாத்தானின் வேலையாக இருக்கிறது. நாம் விழிப்பாயிருந்து, சாத்தானின் தந்திரங்களையெல்லாம் கர்த்தரின் துணைகொண்டு மேற்கொள்ள வேண்டும். ‘சாத்தானின் நிழல் கூட என்மீது படாவண்ணம் என்னைப் பாதுகாத்தருளும் ஆண்டவரே’ என்று நாம் தினமும் ஜெபிப்பது அவசியம்.

ஜெபத்திலும் நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டும். ஒருநாளும் ஜெப வாழ்க்கையை அற்பமாய் எண்ணிவிடாதிருங்கள். ஜெப நேரத்தை வீணாக்கி விடாதிருங்கள். இயேசு சொன்னார் “இனி சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36).

தேவபிள்ளைகளே, விழிப்புள்ள ஜீவியமே வெற்றியுள்ள ஜீவியம். விழிப்பாயிருந்தால் ஒருபோதும் சாத்தான் உங்களை நெருங்க முடியாது. தோல்வி உங்களை மேற்கொள்ள முடியாது. நீங்கள் இப்பொழுது விழிப்புள்ளவர்களாய் இருந்தால், பின்னர் மகிழ்ச்சியுடன் மணவாளனை எதிர்கொண்டு செல்லுகிறவர்களாயிருப்பீர்கள்.

நினைவிற்கு:- “ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்” (1 தெச. 5:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.