AppamAppam - Tamil

ஜூலை 01 – ஓரிடத்தில் சேரவும்!

“வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று” (ஆதி. 1:9).

கர்த்தர் சிருஷ்டிப்பின் மூன்றாம் நாள் ஆரம்பத்திலே, ஜலத்தை ஓரிடமாய்ச் சேரப் பண்ணியது போலவே, ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை ஒன்றாகச் சேர்த்து சபையாக உருவாக்குகிறார். இரட்சிக்கப்பட்டவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார். முதல் நாள் சிருஷ்டிப்பின் வெளிச்சம், இரட்சிப்புக்கு அடையாளமானது. இரண்டாம் நாள் ஜலம் ஞானஸ்நானத்திற்கும், ஆகாய விரிவு உன்னத ஜீவியத்திற்கும் நிழலாட்டமாயின. அதுபோலவே மூன்றாம் நாள் ஒன்றாய்ச்சேர்ந்த ஜலமானது சபைக்கு நிழலாட்டமாய் இருக்கிறது.

கர்த்தர் விசுவாசிகளைத் தனித்தனியாய் சுயவிருப்பம் போல அலைய விடாமல் சபையாக ஒன்று கூட்டி அவர்களை ஒற்றுமையாய் நடத்த கட்டளையிடுகிறார். வேதம் கிறிஸ்துவை தலையாகவும், சபையை சரீரமாகவும் வர்ணிக்கிறது. கர்த்தர் தம் சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட சபையிலே, நீங்கள் ஐக்கியமாகி அங்குள்ள தேவனுடைய பிள்ளைகளோடு ஒன்று சேர்ந்துகொள்ளுங்கள். “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங். 133:1) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.

தேவனுடைய இரட்சிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய ஐக்கியம் மிகவும் தேவை. வேதம் சொல்லுகிறது, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” (எபி. 10:25). ஆதி அப்போஸ்தலருடைய நாட்களிலே, கர்த்தர் இரட்சிக்கப்பட்டவர்களை சபையிலே கூட்டிச் சேர்த்ததினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு நாளுக்கு நாள் பெருகின. ஆத்தும ஆதாயம் செய்வதால் விசுவாசிகள் பெருகுகிறார்கள். விசுவாசிகள் பெருகுவதால் சபை பெருகுகிறது. சபை பெருகுவதால் கர்த்தருடைய ராஜ்யம் பூமியிலே கட்டப்படுகிறது.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்த இஸ்ரவேல் ஜனக் கூட்டத்திற்கு தான் முதலாவதாக “சபை” என்ற பெயர் வந்தது. அவர்கள் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டு வேறு பிரிக்கப்பட்டவர்கள். அவர்கள் கர்த்தருடைய சுதந்தரமும் பங்குமானவர்கள். தண்ணீர் துளிகள் ஒன்றாய்த் திரண்டு ஜலமாய் உருவானதைப் போல அவர்கள் குடும்பமாய்த் திரண்டு தேவ சபையாய் மாறினார்கள். இஸ்ரவேலர் லட்ச லட்சமாய் ஒன்று சேர்ந்து முன்னேறி வரும் காட்சி எத்தனை மகத்துவமானதாய் இருந்திருக்கும்! அவர்கள் தேவ சேனையாக, தேவ சபையாக கெம்பீரமாய் நடந்தார்கள்.

“பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை” என்று எபி. 12:23இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவபிள்ளைகளே, நீங்களும் உலகமெங்குமுள்ள விசுவாசிகளும் ஒன்றாய் இணைந்து சர்வ சங்கமாகிய சபையாக ஆவியினாலே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் சரீரமாக காணப்படுவது எவ்வளவு மகிமையான காரியம்!

நினைவிற்கு:- “பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபே. 5:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.