AppamAppam - Tamil

Sep – 18

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம்…” (கலா. 5:22). ஆவியின் கனிகளில் விசேஷமான ஒரு கனி சமாதானம். அதை பெறும்போதும் உங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும்போதும் உங்களுக்கு மகிழ்ச்சி. இந்த ஆவியின் கனியாகிய சமாதானம் தனித்தும் செயல்படும்; மற்ற பண்புகளோடு சேர்ந்தும் செயல்படும். அன்பு, சந்தோஷம், சமாதானம் எல்லாம் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இயேசுவின் வாழ்க்கையில் ஆவியின் கனிகள் அனைத்தும் நிறைவாய்க் காணப்பட்டன. கிறிஸ்துவை உங்களுக்குள் ஏற்றுக் கொள்ளும்போது, அவருடைய குணாதிசயங்கள் உங்களில் வெளிப்பட வேண்டும். நீங்களும் ஆவியின் கனிகளை கொடுக்கிறவர்களாய் ஜீவிக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கையெல்லாம் சமாதானம் நிரம்பியிருக்கும். ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறும்போது, ஆவியின் வரங்களும், ஆவியின் கனிகளும் உங்களுக்குள் வருகின்றன. ஆவியின் வரங்களை பரலோக தேவன் உங்களுக்குக் கொடுக்கிறார். ஆனால் ஆவியின் கனிகளை நீங்கள் தேவனுக்கு சந்தோஷத்தோடே கொடுக்கிறீர்கள். வேதம் சொல்லுகிறது, “…நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்” (உன். 7:13). இந்த சமாதான கனியை பெற்றுக்கொள்ள நீங்கள் கர்த்தரில் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும். இயேசு சொன்னார், “என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் (யோவா. 15:4). ஒரு நாத்திகவாதி, மனிதனின் படைப்புகள் எல்லாவற்றையும்பற்றி பேசிவிட்டு, “கடவுள் இல்லை; அப்படியே கடவுள் இருந்தாலும் அவர் நமக்கு தேவையில்லை” என்று காரசாரமாக பேசினார். அங்கிருந்த ஒரு கிறிஸ்தவ சகோதரன் அந்த நாத்திகவாதியின் வாதத்தைக் கேட்டுவிட்டு அமைதியாக, “ஐயா, ஒரு சிறு எறும்பைப் பாருங்கள், அது எவ்வளவு சமாதானமாக ஓடி திரிகிறது. உங்களால் ஒரு சிறு உயிருள்ள எறும்பை சிருஷ்டிக்க முடியுமா? அந்த எறும்புக்கு இருக்கும் சமாதானத்தைப் பெற முடியுமா?” என்று கேட்டார். அந்த நாத்திகவாதி சிந்தித்துப் பார்த்தார். அவர் எவ்வளவோ நாத்திகவாதம் பேசிய போதிலும், அவருடைய சொந்த வாழ்க்கையிலோ சமாதானமில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஆகவே, அவர் அந்த கிறிஸ்தவ சகோதரனைப் பார்த்து, “உண்மைதான். மனித ஞானத்தால் சமாதானத்தை பெற முடியாது” என்று ஒப்புக் கொண்டார். ஆம் தேவ சமாதானம் என்பது தேவன் அருளும் ஈவு ஆகும். சூழ்நிலைகள் மாறிவிடும்; துன்பங்கள் விலகிவிடும். அவற்றின் மத்தியிலும் சமாதானம் நிலைத்து நிற்கும். நிலைத்திருக்கிற ஒரே சமாதானம் தேவன் தருகிற சமாதானம்தான். அதனுடைய முடிவும் இனிமையானது. தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியின் உதவியால் நிலையான நிரந்தரமான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். விசுவாசிகளுக்கு மட்டுமே கிடைக்கிற பெரிய பாக்கியம் இது. ஆவியானவர் இலவசமாய் அளிக்கும் மேன்மையான கனி இது. நினைவிற்கு :- “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோம. 14:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.