AppamAppam - Tamil

ஜூன் 23 – அறியாத மறைபொருள்!

“இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்” (ஏசா. 48:6).

ஒரு காரியம் அறிவிக்கப்படாவிட்டால் மற்றவருக்கு அது எப்படித் தெரியும்? கர்த்தர் உங்களுக்கு அறிவிக்காவிட்டால் மறைபொருட்களைக் குறித்து உங்களால் அறிந்துகொள்ள முடியாது. கர்த்தர் அன்போடு உங்களைப்பார்த்து, ‘இது முதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்’ என்கிறார்.

ஆதி நாட்களிலே, கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு அறியாத பல மறைபொருட்களை வெளிப்படுத்தச் சித்தமானார். உதாரணமாக, கிறிஸ்துவினுடைய பிறப்பைக் குறித்து எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் துல்லியமாய் அறிவித்தார். தீர்க்கதரிசியாகிய தம்முடைய ஊழியர்களுக்கு தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று வேதம் சொல்லுகிறது.

முன்பு தீர்க்கதரிசிகளின் மூலமாய் இரகசியங்களை அறிவித்தவர், இந்த கடைசி நாட்களில் கிறிஸ்துவின் மூலமாய் உங்களுக்கு மறைபொருட்களை எல்லாம் வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார். உங்களுடைய எதிர்காலத்தை உங்களுக்கு வெளிப்படுத்த கர்த்தர் எப்போதுமே ஆவலுள்ளராயிருக்கிறார் என்பது எத்தனை மகிழ்ச்சிக்குரிய காரியம்!

தேவபிள்ளைகளே, தேவ சித்தத்தை அறிந்தவர்களாய், வருங்காலங்களில் உங்கள் குடும்பத்தை நடத்த எப்போதும் கர்த்தரிடத்தில் ஆலோசனைக் கேளுங்கள். “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3) என்று கர்த்தர் வாக்குப்பண்ணியிருக்கிறாரே.

உங்களுக்குத் தெரிந்தது கடந்த காலமும், நிகழ்காலமும்தான். ஆனால் கர்த்தருக்கோ, வருங்காலமும் தெரியும். வருங்காலத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்கிற ஆலோசனையையும் கொடுக்க அவரால் முடியும். “வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக் குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்” (ஏசா. 45:11) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இரவு வேளைகளில் படுக்க செல்லும்போது, எனது எதிர்காலம் குறித்து சொப்பனம் மூலமாக எனக்கு வெளிப்படுத்தும் என்று ஜெபியுங்கள். யோசேப்போடுகூட சொப்பனத்திலே பேசியவர், சாமுவேலோடு தரிசனத்திலே பேசியவர், நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தை அறிவித்தவர், அப்படியே உங்களுக்கும் செய்வார்.

இந்நாளில் கர்த்தர் உங்களோடுகூட பேச ஆயத்தமாயிருக்கிறார். வருங்காலத்தை வெளிப்படுத்தி, உங்களை மேன்மையான பாதையிலே நடத்த சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதுதான் (சங். 91:15).

நினைவிற்கு:- “இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்” (ஏசா. 30:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.