AppamAppam - Tamil

மே 25 – ஆகாரம் தேவை!

“அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்” (லூக். 8:55).

வேதத்திலே, யவீருவின் மகளை கர்த்தர் உயிரோடு எழுப்பியதும், பெற்றோரிடம் கர்த்தர் ஆலோசனையாக அல்லாமல் கட்டளையாக, அவளுக்கு ஆகாரங்கொடுங்கள் என்று சொன்னார். இயேசு ஆகாரம் கொடுக்கும்படி கட்டளையிட்டதினாலே, ஆகாரக்குறைவே அவளது மரணத்துக்கு காரணமாயிருக்கக்கூடும்.

சரீரத்திற்கு எப்படி உணவு தேவையோ, அப்படியே ஆத்துமாவின் ஆரோக்கியத்திற்கும் உணவு தேவை. ஆத்துமாக்களுக்கு வேத வசனமாகிய உணவு சரியாக கிடைக்காததினால் பெலவீனப்படுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். பாவங்களும், இச்சைகளும் ஆத்துமாவைத் தாக்கும்போது, அவற்றை எதிர்த்து நிற்க முடியாமல், ஆத்துமா வியாதிப்பட்டு போய்விடுகிறது.

தாவீது, “கர்த்தாவே, என் மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும்” (சங். 41:4) என்று கெஞ்சினார். அவருடைய சரீரத்தில் செய்த பாவத்தினிமித்தமாக ஆத்துமா பெலவீனமடைந்தது. அதனால்தான் வியாதிப்பட்ட ஆத்துமாவைக் குணமாக்கும் என்று கெஞ்சுகிறார். சரீரம் ஜீவனுள்ளதாய் காணப்பட்டாலும், சரீரத்தில் செய்த பாவத்தினால் ஆத்துமா மரண அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம்.

ஆத்துமாவையும், சரீரத்தையும் உயிர்ப்பிக்க வல்லமையுள்ளது கர்த்தருடைய வார்த்தைதான். “சிறுபெண்ணே, எழுந்திரு” என்ற தேவனுடைய வார்த்தை யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. உயிர்ப்பிக்கப்பட்ட அவள் தொடர்ந்து உயிரோடு இருக்கவேண்டுமென்றால், அவளுக்கு ஆகாரம் அவசியம். வசனமாகிய உணவு அவசியம். தேவனுடைய வசனம் ஆகாரத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (உபா. 8:3, மத். 4:4).

அப். பவுல், “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேதுரு 2:3) என்று எழுதுகிறார். சிறு பிள்ளைகள் பசிக்கும்பொழுது உணவு கேட்டு அழுகின்றன. உண்டவுடன் அவர்களது அழுகை நின்றுவிடுகிறது. அவர்கள் வளர்ந்தபிறகும் பசிக்கும்போது ஆகாரத்தை கேட்டு பெற்றுக்கொள்கிறார்கள். உண்டவுடன் அவர்கள் உற்சாகமாய் இருக்கிறார்கள். வாழ்க்கையின் எல்லா நிலையிலும் ஆத்துமாவுக்கும் உணவு அத்தியாவசியமானதாயிருக்கிறது. ஆத்துமாவின் உற்சாகத்திற்கும் உணவாகிய வேதவசனம் அத்தியாவசியமானதாயிருக்கிறது.

எரேமியா எழுதுகிறார்: “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது” (எரே. 15:16). தேவபிள்ளைகளே, வேத வசனத்தை ஆவலோடு உட்கொள்ளுவீர்களாக.

நினைவிற்கு:- “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாக்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங். 119:103).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.