AppamAppam - Tamil

மார்ச் 30 – வீட்டைக் கட்டுகிறவள்!

“புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்” (நீதி.14:1).

வீடு கட்டப்படவும், வீட்டில் சமாதானம் விளங்கவும் புத்தியுள்ள ஸ்திரீ அங்கே அவசியம். ஞானமாய் குடும்பத்தை நடத்திச்சென்று, வரவுக்கு ஏற்ற செலவு செய்து, கணவனையும், பிள்ளைகளையும் பேணிக் காக்கும் புத்தியுள்ள ஸ்திரீ குடும்பத்திற்கு மிகவும் தேவை.

இன்று திருமணம் என்பது வியாபாரச் சந்தையாகிவிட்டது. தரகர்கள் இடையிலே புகுந்து அங்கே பத்து லட்சம் கிடைக்கும், இங்கே ஒரு லட்சம் தங்க ஆபரணங்கள் கிடைக்கும் என்று ஆசை காட்ட, முடிவிலே கொஞ்சமும் புத்தியில்லாத உலகப்பிரகாரமான பெண்ணைத் தெரிந்தெடுத்து வாழ்நாளெல்லாம் வேதனைப்படுகிறார்கள். நீதிமொழிகளின் புத்தகத்திலே அநேக ஸ்திரீகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவர்களில், புத்தியுள்ள ஸ்திரீ மிகவும் முக்கியமானவள். புத்தியில்லாமல் மனம்போல வாழுகிற பெண்களால் அநேக குடும்பங்கள் உடைந்து போகின்றன.

இரண்டாவதாக, குணசாலியான ஸ்திரீயைக் குறித்து நீதி. 31-ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது” (நீதி. 31:10). குணசாலியான ஸ்திரீயைக் குறித்து இந்த வேதபகுதி மிக அழகாகவும், அருமையாகவும் விளக்கிச் சொல்லுகிறது. பெண் தேடும் இளைஞர்கள் இந்த அதிகாரத்தை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மூன்றாவது, சாந்தகுணமுள்ள ஸ்திரீயைக் குறித்து 1 பேது. 3:4-லே வாசிக்கலாம். “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்” (1 பேது. 3:4,5).

நான்காவதாக, கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயைக் குறித்து நீதி.31:30-லே வாசிக்கலாம். “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” (நீதி.31:30).

ஒரு பெண் தேவ பக்தியுள்ளவளாக இருந்தால்தான் பிள்ளைகளையும் பக்திமார்க்கத்திலே வளர்க்க முடியும். கணவனையும் இரட்சிப்பிற்குள்ளே கொண்டுவர முடியும். கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீ பாவத்திற்கு விலகுவாள். நற்கிரியைகளைச் செய்வாள். கர்த்தருக்கும், இனத்தவர்களுக்கும் பிரயோஜனமான வாழ்க்கை வாழுவாள்.

ஐந்தாவதாக, “மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள்” (யாத். 35:22) என்று வேதம் சொல்லுகிறது. மனப்பூர்வமான ஸ்திரீகள் கர்த்தருக்கென்று மகிழ்ச்சியோடு கொடுக்கிறார்கள். கர்த்தருடைய ஊழியங்களைத் தாங்குகிறார்கள். ஊழியங்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கிறார்கள். உன்னதமான தேவனுடைய ஊழியத்திலே அவர்களுக்கு மிகுந்த பங்குண்டு.

நினைவிற்கு:- “வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்” (1 தீமோ. 2:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.