bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

ஏப்ரல் 29 – நிலை கொண்டிருப்பாய்!

“…நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலை கொண்டிருப்பார்” (ஆகா 2:5).

ஆகாய் தீர்க்கதரிசியின் மூலமாய் அன்று இஸ்ரவேலருக்கும், இன்று உங்களுக்கும் கர்த்தர் கொடுக்கிற வாக்குத்தத்தம் “ஆவியானவர் உங்கள் நடுவிலே நிலைகொண்டிருப்பார்” என்பதேயாகும். ஆவியானவர் நிலை கொண்டிருக்கும்போது, மனுஷர் மத்தியில் தேவாதி தேவன் வாசம் செய்கிறார் என்கிற உணர்வைப் பெறுகிறீர்கள்.

இந்த வாக்குத்தத்தத்தை கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்ததின் பின்னணியை நீங்கள் சற்றே தியானித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். கர்த்தர் சாலொமோனைக் கொண்டு மகிமையான தேவாலயத்தைக் கட்டினார். ஆனால் சாலொமோனோ, கர்த்தர் தன் மேல் வைத்திருக்கிற மதிப்பை அசட்டை செய்து, கர்த்தரைப் புறக்கணித்து, அந்நிய தெய்வங்களாகிய அஸ்தரோத்துக்கும், மில்கோமைக்கும், காமோசுக்கும், மோளோகுக்கும் முன்பாக மண்டியிடத் துவங்கினார் (1 இராஜா. 11:5,7).

மட்டுமல்லாமல், சாலொமோனுக்குப் பிறகு ஜனங்களும் விக்கிர ஆராதனைக்குள் செல்ல ஆரம்பித்தார்கள். ஜீவனுள்ள தேவனுடைய அன்பை விட்டு விலகினார்கள். கர்த்தருடைய ஆலயம் அவர்களுக்கு பாரம்பரியமாகவும், சடங்காச்சாரமான காரியங்களைச் செய்கிற ஸ்தலமாகவுமே விளங்கியது. இதனால் துக்கமடைந்த கர்த்தர், இஸ்ரவேலருக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவை எழுப்பினார். நேபுகாத்நேச்சார் வந்து சாலொமோன் கட்டின தேவாலயத்தை தரைமட்டமாய் இடித்துப் போட்டான்.

இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிற நாட்கள் வந்தன. கர்த்தர் செருபாபேலினுடைய உள்ளத்திலே மீண்டும் அந்த ஆலயத்தைக் கட்டும்படியான ஏவுதலைத் தந்தார். வேதபாரகனாகிய எஸ்றாவையும், ராஜாவின் பானபாத்திரக்காரனாயிருந்த நெகேமியாவையும் கர்த்தர் எழுப்பினார். ஆகா தீர்க்கதரிசனம் சொல்லி அவர்களை உற்காகப்படுத்திக் கொண்டு வந்தார். செருபாபேல் புதிய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு பதினாறு ஆண்டுகள் ஆகியும் கட்ட முடியாதபடி பல தடைகள் வந்தன. சன்பல்லாத்தும், தொபியாவும் இன்னும் பலரும் எழும்பி தடை செய்தார்கள். செருபாபேலின் கையிலே போதுமான பண வசதியோ, ஆள் பலமோ இல்லாததினால் காலங்கள் பின்னிட்டுக்கொண்டே வந்தது.

சோர்ந்துபோன தேவனுடைய பிள்ளைகளைக் கர்த்தர் திடப்படுத்தும்படி சித்தமானார். ஆகவேதான் அன்போடு அவர்களுக்கு வாக்களித்து “நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களுடனே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்” (ஆகாய் 2:5) என்று கர்த்தர் பேசினார்.

தேவபிள்ளைகளே, ஆவியானவர் உங்களில் நிலைகொண்டிருப்பார். ஆவியானவர் உங்களிலே நிலைகொண்டிருக்கும்போது எதைக் குறித்தும் நீங்கள் கலங்கி தவிக்க வேண்டியதில்லை. அவரே முற்றுமுடிய உங்களை வழி நடத்திச் செல்லுவார்.

நினைவிற்கு:- “வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்” (ஏசா. 59:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.