No products in the cart.
ஏப்ரல் 14 – செழிப்பான மேட்டிலே!
“என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு” (ஏசா. 5:1).
செழிப்பான மேட்டிலே, நல்ல உரமும், நல்ல மண்ணும், நல்ல நீர் பாசனமுமுண்டு. மட்டுமல்ல, செடிகள் ஓங்கி வளருவதற்கான சீதோஷண நிலைகளுமுண்டு. சரி, உங்களுடைய செழிப்பு என்ன? முதலாவது, கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற பிரதான செழிப்பு புத்திரசுவிகாரம்தான். ஆகவே நீங்கள் அவரை அன்போடு ‘அப்பா, பிதாவே’ என்று அழைக்கிறீர்கள்.
இரண்டாவது, உங்களுக்கு இருக்கிற செழிப்பு, கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள். வேதம் முழுவதிலும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வல்லமையான வாக்குத்தத்தங்களை உங்களுக்குத் தந்திருக்கிறார். அவை மகா மேன்மையானவை, செழிப்பானவை, அருமையானவை. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன.
மூன்றாவது, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற செழிப்பு, அவரோடுகூட நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையாகும். முதன் முதல் ஆதாமோடு உடன்படிக்கை செய்து, சர்ப்பத்தின் தலையை நசுக்குகிற மேசியாவை வாக்களித்தார். நோவாவோடு உடன்படிக்கை செய்து இனி ஜலப்பிரளயத்தினால் உலகத்தை அழிப்பதில்லை என்றும் அதற்கு அடையாளமாக வானவில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன் என்றும் உறுதி கூறினார். இஸ்ரவேல் ஜனங்களோடும் நியாயப்பிரமாணத்தின் மூலமாய் உடன்படிக்கை செய்தார். இன்று இயேசு கிறிஸ்து உங்களோடு தம்முடைய இரத்தத்தினாலே புது உடன்படிக்கை செய்திருக்கிறார்.
நான்காவது, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற செழிப்பு தேவனை ஆராதிக்கும் ஆராதனைகள். பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களைப் பார்க்கிலும் உங்களை தமக்கென்று தெரிந்துகொண்ட ஆண்டவர், உங்களுக்கு ஆராதனை முறையையும், தேவ ஊழியர்களையும், பரலோக செய்திகளையும் தந்திருக்கிறார். ஆராதனை நேரத்தில் தேவப் பிரசன்னத்தினால், உங்களை நிரப்புகிறார். நீங்கள் ஆராதனை செய்யும்போதெல்லாம் உலகமெங்குமுள்ள பரிசுத்தவான்களோடு மட்டுமல்ல, பரலோகத்திலுள்ள கேருபீன்களோடும் சேராபீன்களோடும் எண்ணற்ற தேவதூதர்களோடும்கூட இணைக்கப்பட்டு விடுகிறீர்கள். பூமியின் ஆராதனைகள் பரலோக ஆராதனைக்கு நிழலாட்டமாயிருக்கிறது.
கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற எண்ணற்ற செழிப்புகளிலே, பாவ மன்னிப்புண்டு, இரட்சிப்புண்டு, தெய்வீக சமாதானமுண்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகமுண்டு, நித்திய ஜீவனுண்டு, ஆவியின் வரங்களுண்டு, ஆவியின் கனிகளுண்டு. சங்கீதக்காரன் சொல்லுகிறார், “செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்” (சங். 66:12). “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங். 16:6). தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் அதை செழிப்பாக்க முடியும் (சங். 65:9).
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற மேன்மையான ஆசீர்வாதங்களை எண்ணி அவரைத் துதியுங்கள்.
நினைவிற்கு:- “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்” (உபா. 8:7).