No products in the cart.
பிப்ரவரி 13 – வரும்!
“குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதி. 21:31).
ஒரு வயதுமுதிர்ந்த சகோதரனும் அவரது மனைவியும் ஆசிரியர்களாய் இருந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழையானவர்கள். ஆனால் கர்த்தரை நேசித்து, தங்கள் பிள்ளைகளுக்கு உயர்ந்த கல்வியைக் கொடுத்தார்கள்; கிறிஸ்துவையும் அறிந்துகொள்ள வைத்தார்கள். இதன் காரணமாக, அவர்களது ஒன்பது பிள்ளைகளும் மிக அதிகமாப் படித்து மேன்மையான நிலைமைக்கு உயர்ந்தார்கள். கர்த்தர் எல்லா பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் ஜெயத்தைக் கட்டளையிட்டிருந்ததினால் அவர்கள் ஆண்டவரை மிகவும் நேசித்தார்கள்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல உணவைக் கொடுக்கலாம், அருமையான உடைகளைக் கொடுக்கலாம், ஏராளமான பணத்தை செலவழிக்கலாம். இவற்றையெல்லாம் கொடுத்தும் அவர்களுக்கு கிறிஸ்துவைக் கொடுக்காமல் போனால் அவர்கள் மேன்மை அடைவதில்லை. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தரை நேசிப்பதே வெற்றியின் ஆரம்பம். பிள்ளைகள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும், ஜெயம் கொடுக்கிறவர் நம் தேவனாகிய கர்த்தரே! அதை உணர்ந்துதான் சாலொமோன் ஞானி எழுதுகிறார்: “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதி. 21:31).
“அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்” (சகரியா 10:3) என்று வேதம் சொல்லுகிறது, பரீட்சையிலே நின்றாலும் சரி, வேலை வாய்ப்புக்காக நின்றாலும் சரி, முன்னேற்றத்திற்காக நின்றாலும் சரி, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைச் சிறந்த குதிரைகளாக நிறுத்துவார்.
கர்த்தருடைய பிரசன்னம் எப்போதும் உங்களோடு இருக்கட்டும். உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் அவரையே எப்போதும் முதன்மையாக வையுங்கள். வேதம் சொல்லுகிறது, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33) “உன் வழிகளிளெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்’ (நீதி. 3:6).
எந்த பிரச்சனையானாலும் சரி, கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கட்டளையிடுவார். கானான் தேசத்தில் இராட்சதப் பிறவிகள் இருக்கிறதைக் குறித்து யோசுவாவும், காலேபும் கவலைப்படவில்லை. அது எவ்வளவு உறுதியான அரணான பட்டணம் என்பதைக் குறித்தும் அக்கறைக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்னது என்ன? “கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டு போய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்” (எண். 14:8). கர்த்தர் நம்முடனே இருக்கிறார் என்றும் அதை எளிதாய் ஜெயிக்கலாம் என்றும் எண்ணினார்கள்.
தேவபிள்ளைகளே, எப்போதும் கர்த்தரை முன் நிறுத்தி வெற்றி முழக்கமிடுங்கள். விசுவாச வார்த்தைகளை ஜெயத்துடன் பேசுங்கள். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57) என்று சொல்லுங்கள்.
நினைவிற்கு:- “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).