No products in the cart.
Mar 28 – மேலான அதிகாரம்!
“எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை” (ரோமர் 13:1).
கர்த்தர் உங்களுக்கு அதிகாரத்தையும், வல்லமையையும் தருகிறார். அதேநேரம், உங்களுக்கு மேலே உள்ள அதிகாரிகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்கிறார். கிறிஸ்துவுக்கு வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமுமிருக்கிறது. ஆனாலும் பிதாவின் அதிகாரத்திற்கு அவர் கீழ்ப்பட்டவராகவேயிருந்தார். பிதாவின் சித்தத்தை செய்வதே எனக்குப் போஜனம் என்று சொன்னார். பிதாவின் வார்த்தைக்காகவே எப்போதும் காத்துக் கொண்டிருந்தார்.
குமாரனாகிய இயேசுவின் மூலமாக நீங்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அசுத்த ஆவிகளின் மேல் கர்த்தர் உங்களுக்கு அதிகாரத்தைத் தந்திருக்கிறார். வியாதிகளின் மேல் அதிகாரத்தைத் தந்திருக்கிறார். இயற்கையின் மேல் அதிகாரத்தைத் தந்திருக்கிறார். சத்துருவினுடைய சகல வல்லமைகளின்மேலும் உங்களுக்கு அதிகாரத்தைத் தந்திருக்கிறார். அதேநேரம், நீங்கள் கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு எப்போதும் அடங்கினவர்களாய் வாழ வேண்டும். அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களாய் உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
சிலர் கர்த்தருடைய நாமத்தினால் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய பிரியப்படுவார்கள். ஆனால் வேத வசனத்திற்கு கீழ்ப்படியமாட்டார்கள். தங்களை வழிநடத்துகிற தேவனுடைய ஊழியர்களுக்கு கீழ்ப்படியமாட்டார்கள். எந்த மனுஷனானாலும் மேலான அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது.
நூற்றுக்கு அதிபதி, “நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்” (மத். 8:9) என்று சொல்லுகிறான். அவன் நூற்றுக்கு அதிபதி. அவனுக்கு அதிகாரமுண்டு. ஆனாலும், அவன் ரோம சாம்ராஜ்யத்திலுள்ள தளபதியின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டுத்தான் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்திலே நீங்கள் ஒரு மனைவியாய் இருந்தால், உங்கள் மேலே புருஷரை கர்த்தர்தாமே அதிகாரியாய் வைத்திருக்கிறார். நீங்கள் உங்கள் கணவருக்கு கீழ்ப்படிவதின் மூலமாக கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறீர்கள். கணவனின் அதிகாரத்திற்கு நீங்கள் கீழ்ப்படியும்போது, உங்கள் பிள்ளைகள் உங்கள் அதிகாரத்திற்கு கீழ்ப்படிவார்கள். உங்களுடைய வார்த்தைகளும் அதிகாரமுள்ளதாகவே இருக்கும்.
அன்று ஏவாள், ஆதாமின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருந்தால், சர்ப்பத்தின் யோசனைக்கு இசைந்திருக்கமாட்டாள். தானாக தீர்மானித்து பழத்தை புசித்திருந்திருக்கவும்மாட்டாள். தேவ பிள்ளைகளே, கர்த்தர் உங்களை எந்த நிலைமையில் வைத்திருந்தாலும், மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கர்த்தருக்குள் மனப்பூர்வமாய் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுடைய வார்த்தைகளை கனப்படுத்தி மேன்மைப்படுத்துவார். நினைவிற்கு:- “நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்” (தானி. 4:26).