No products in the cart.
ஜனவரி 25 – பூரண பரிசுத்தம்!
“பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரி. 7:1).
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் பரிசுத்தத்திற்கோ எல்லையே இல்லை. மேலும், மேலும் சுத்திகரிக்கப்படவேண்டுமே என்ற வாஞ்சை உங்களை பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமடையச் செய்யும்.
பரிசுத்தத்திலே நீங்கள் எப்படிப் பூரணப்பட முடியும்? கர்த்தருக்குப் பயப்படுகிற பயமே அவருடைய சாயலின்படி பரிசுத்தமடைய உங்களை ஏவி எழுப்புகிறது. கர்த்தருக்குப் பயப்படுகிறவன் இச்சைகளுக்கு விலகுவான். பாவத்திற்குத் தப்பி ஓடுவான். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஜாக்கிரதையாய் இருப்பான். ஆனால் தேவபயம் இல்லாதவனோ துணிந்து அசுத்தமானதை நடப்பிப்பான். வேதம் சொல்லுகிறது, “அவன் (துன்மார்க்கன்) கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை” (சங். 36:1).
யோசேப்பின் வாழ்க்கையைக் கவனித்துப் பாருங்கள். யோசேப்பு தன்னைப் பாதுகாத்துக்கொண்டதின் இரகசியம் அவனுக்குள் இருந்த தேவபயம்தான். பாவ சோதனை வந்தபோது அவன் அதை மனுஷருக்கு முன்பாகப் பாவமாக எண்ணாமல், தன்னைக் காண்கிற கர்த்தருக்கு முன்பாக கொடிய பாவமாகக் கண்டான்.
யோசேப்பு, “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” (ஆதி. 39:9) என்று கேட்டான். இந்த காரியம் தேவனுக்கு முன்பாக பாவமாய் இருக்குமே என்று தேவனை முன் வைத்து பாவத்திற்கு விலகி ஓடுவதுதான் தேவபயமாகும்.
நீங்கள் தேவபயத்தோடு பரிசுத்தத்தைப் பாதுகாக்கத் தீர்மானிக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு உதவி செய்து பாவ சோதனைகளிலிருந்து விலக்கிக் காப்பார். உங்களுக்கு தேவ பயமும், பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இருக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் தம்முடைய இரத்தத்தினால் கழுவுவார். வசனத்தால் சுத்திகரிப்பார். பரிசுத்த ஆவியினால் மூடிக் கொள்ளுவார்.
இன்று நீங்கள் உங்களைப் பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தருடைய வருகையிலே மிகவும் சந்தோஷமாய், உற்சாகமுள்ளவர்களாய் இருப்பீர்கள். விடுதலையோடு பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொண்டு, மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு எதிர்கொண்டு போவீர்கள்.
நம்முடைய தேவன் பூரண பரிசுத்தராய் இருக்கிறதுபோல நீங்களும் பூரண பரிசுத்தத்தோடு உங்களை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும் அல்லவா? “அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” (வெளி. 19:7) என்று வேதம் சொல்லுகிறது.
கிறிஸ்து சபையின் தலையாய் இருக்கிறார் (எபே. 1:22, 23). நீங்கள் அவருடைய சரீரமாகவும், தனித்தனி அவயவங்களாகவும் இருக்கிறீர்கள். தலையாகிய கிறிஸ்து பரிசுத்தத்தில் பூரணமாய் இருக்க, நீங்கள் அசுத்தமாய் ஜீவித்தால் எப்படி அவருடைய சரீரத்தில் இணைந்து பூரணமாய் இருக்க முடியும்? தேவபிள்ளைகளே, பரிசுத்தமாக்கப்பட்டு தேவசாயலில் மறுரூபப்படுங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத். 24:44).