AppamAppam - Tamil

Nov 10 – நெகேமியாவும் எதிர்ப்பும்!

“இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன்” (நெகே. 1:11).

நீங்கள் கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்கள் செய்ய வேண்டுமென்று முயற்சியெடுக்கும்போது, சாத்தான் அதற்கெதிராக எதிர்ப்பையும் தடைகளையும் கொண்டு வருவான். உண்மையான ஊழியத்திற்கு விரோதமாக எப்போதும் சாத்தான் எழும்பி கிரியை செய்துகொண்டேதான் இருப்பான்.

நெகேமியா பக்தி வைராக்கியங்கொண்டு கர்த்தருக்கென்று ஆலயத்தையும், எருசலேமின் மதில் சுவர்களையும் கட்ட ஆரம்பித்தபோது, அவருக்கு ஏராளமான எதிர்ப்புகள் இருந்தன; சத்துரு மூர்க்கமாய் போராடினான். அதே நேரத்தில் கர்த்தர் அவருக்கு துணை நின்றார். ஜனங்களுடைய உள்ளத்தில் அவரோடு இணைந்து நிற்க ஏவுதலைக் கொடுத்தார். தேவ ஜனங்களும் கர்த்தருடைய ஊழியத்திற்கு தியாகமாய்க் கொடுக்கவும், அர்ப்பணித்து கடமைகளை நிறைவேற்றவும் ஆவலுள்ளவர்களாய் இருந்தார்கள். தியாகமும் அர்ப்பணிப்புமான ஊழியத்திற்கு இணையானது ஒன்றுமேயில்லை.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ராஜ்யம் பூமியிலே விரிவடைவதற்கு நீங்கள் எந்தத் தியாகத்தையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். எழுப்புதலுக்காக எந்தக் கிரயத்தையும் செலுத்தத் தீர்மானிக்கும்போது, நிச்சயமாகவே உங்களுடைய ஊழியத்தில் பெரிய பலனைக் கட்டளையிடுவார்.

நெகேமியா ஆலய மதில் சுவரைக் கட்ட ஆரம்பித்தவுடனே பலத்த எதிர்ப்பு வந்துவிட்டது. நெகேமியாவுக்கு விரோதமாக சன்பல்லாத், தொபியா என்பவர்கள் எழும்பினார்கள். வேதம் சொல்லுகிறது, “…இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது” (நெகே. 2:10).

சாத்தான் தேவனுடைய ஜனங்களுக்கு எதிரியாய் இருக்கிறான். எந்த ஒரு மனுஷன் ஆத்தும இரட்சிப்பிற்காக பாடுபடுகிறானோ அவன் சாத்தானுடைய தாக்குதலுக்கு இலக்காகிறான். நீங்கள் கர்த்தருக்காக எந்த முயற்சியையும் ஆரம்பிக்கும்போது கர்த்தருடைய எதிரிகள் உங்களை கேலியும் பரியாசமும் செய்ய ஆரம்பிப்பார்கள். உங்களை முட்டாள் என்று கூறி கேலி செய்வார்கள்.

நெகேமியாவைப் பாருங்கள். நெகேமியாவின் இரண்டு விரோதிகளும் தங்களுடைய குற்றச்சாட்டுகளினாலும், கேலி பரியாசங்களினாலும் நெகேமியாவை சோர்ந்து போகப்பண்ணினார்கள். “அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்கள் கல் மதில் இடிந்து போகும் என்று அவர்கள் சொன்னதாக வேதத்தில் வாசிக்கிறோம்” என்றார்கள். ஆனால் அவரோ விரோதிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. நெகேமியா செய்தது என்ன? அவர் முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார். அது எத்தனை உருக்கமான ஜெபம்! இதை நீங்கள் நெகேமியா 4:4-ல் வாசிக்கலாம். எந்தச் சூழ்நிலையிலும், பரியாசங்கள், நிந்தைகள், தடைகள், போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் எதிர்த்து நெகேமியா ஜெபிக்கத் தீர்மானித்தார்.

தேவபிள்ளைகளே, நீங்களும் அவ்விதமாய் ஜெபிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:-” என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்” (நெகே. 13:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.